சந்தையில் அரிசி விலை உயர்வடைந்துள்ளது. ஆனால், அரசு அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காது. எதிர்வரும் அறுவடையின் பின் அரிசி விலை தானாகவே குறையும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களுக்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி நிலையில் சந்தையில் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம். அவ்வாறு தட்டுப்பாடு ஏற்படும் போது பொருள்களுக்கான விலை அதிகரிக்கும். இவ்வாறு விலை அதிகரிப்பது சாதாரண நிலைமை அல்ல.
உலகளாவிய ரீதியில் விநியோக நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ள இந்நிலையில் முன்னரைவிட சாதாரண விலையில் பொருள்களைக் கொள்வனவு செய்யலாம் என எண்ணுவது அறியாமையாகும்.
அரிசி விலையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் கடந்த அரசின் கொள்கையைத் தான் பின்பற்றவேண்டும். ஏனெனில் அவர்கள் அறுவடை நெருங்கும் காலத்திலும் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து சந்தையில் விநியோகித்தனர்.
அதன் மூலம் அவர்களால் அரிசியை 85 ரூபாவுக்கு வழங்க முடிந்தது. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை அதுவல்ல.
உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களுக்கு இறக்குமதி தடை விதித்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதே அவருடைய கொள்கையாகும். அதன் மூலம் மக்களுக்கு வருமானத்தை அதிகரிக்கக் கூடியதாகவிருக்கும்- என்றார்.