இனிப்புப் பண்டத் தொழில்துறையை, முன்னணி ஏற்றுமதித்துறையாக மாற்ற நடவடிக்கை : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

0
129

இனிப்புப் பண்டத் தொழில்துறையை, நாட்டின் முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு, அரசாங்கம் ஆதரவளிக்கும் என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில், நேற்று பிற்பகல் இடம்பெற்ற, இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் சங்கத்தின் 30 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில், இவ்வாறு குறிப்பிட்டார்.

கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு, அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களை குத்தகை அடிப்படையில் வழங்க, அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சிலாபம் மற்றும் குருணாகல் பிரதேசங்களில் உள்ள தோட்டங்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும், ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபை, அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எல்கடுவ உள்ளிட்ட ஏனைய காணிகளையும், இதற்காகப் பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை பயன்படுத்தப்படாத மகாவலி ஏ மற்றும் பி வலயங்களில் பயிர்ச் செய்கையையை ஊக்குவிப்பதன் மூலம், நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும்.

போட்டி மிக்க ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக, தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்.

ஏனைய நாடுகளுடன் தற்போதுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளையும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைகளையும் வலுப்படுத்த, அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அத்துடன், தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், தென்னை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன, நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில், ஆராய்ச்சித் துறைக்காக சுமார் 8 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் சங்கத்தின் 30 ஆவது பொதுச் சபைக் கூட்டம், நேற்று இடம்பெற்றது.இதில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார்.
நாட்டின் 8 முன்னணி இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்களுக்கு, ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கி வழங்கப்பட்டன.

இதன் போது, இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சமித பெரேரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, நினைவுப் பரிசை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரன, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சமரதுங்க மற்றும் இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.