அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி சதமடித்து அசத்தினார். இந்த நிலையில் இன்னும் ஒரு சதம் அடித்தால் டான் பிராட்மனின் உலக சாதனையை கோலி சமன் செய்வார்.
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1 – 0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது போட்டி வரும் 6ஆம் திகதி தொடங்குகிறது.
முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஜெய்ஸ்வால் 161 ஓட்டங்களும், கோலி 100 ஓட்டங்களும் சேர்த்து அசத்தினர். பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் மற்றும் அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா ஆகியோர் அசத்தினர். இதனால் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தத் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடி வந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவரால் அவுஸ்திரேலியாவில் சாதிக்க முடியுமா? என்ற கேள்விகள் எழுந்தன.
ஆனால், முதல் போட்டியிலேயே சதமடித்த அவர் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், அவுஸ்திரேலிய மண்ணில் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் அவர் 10 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் அவுஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற உலக சாதனையை கோலி படைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்தத் தொடரில் இன்னும் ஒரு சதம் அடித்தால் குறிப்பிட்ட ஒரு நாட்டில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற டான் பிராட்மனின் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்வார்.
டான் பிராட்மன் (அவுஸ்திரேலியா) இங்கிலாந்தில் 11 சதங்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்து விராட் கோலி (இந்தியா) அவுஸ்திரேலிய மண்ணில் 10 சதங்கள் அடித்துள்ளார்.
இந்த சாதனை பட்டியலில் தலா 9 சதங்களுடன் சச்சின் (இந்தியா) மற்றும் ஜாக் ஹோப்ஸ் (இங்கிலாந்து) 3ஆவது இடத்தில் உள்ளனர்.