‘ஈழநாடு’ குழுமத்தின் தலைவர் குகநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரைப் பார்த்து அடிக்கடி சொல்லுவார், இவர்கள் பிள்ளையைப் பெறவும் விரும்புகின்றார்கள். அதேவேளை, கன்னித் தன்மையுடன் இருக்கவேண்டும் என்றும் நினைக்கின்றார்கள் என்று.
அவர்கள் கொள்கையில் உறுதியாக இருப்பதால், அதற்காக கன்னியாகவே இருக்கவேண்டும் என்பது கொள்கை என்றால் அவர்களால் எந்தக் காலத்திலுமே பிள்ளை பெற்றுக்கொள்ளமுடியாது. அவர்கள் பிள்ளையைப் பெறவேண்டும் என்றால் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்யத்தான்வேண்டும் என்பது அவரது கருத்தாக இருக்கவேண்டும்.
சில வருடங்களுக்கு முன்னர் சங்கிலியன் பூங்காவில் நடந்த முன்னணியின் கூட்டம் ஒன்றில் பேசிய ஒருவர், அவர்களின் தலைவரை பிரபாகரனுடன் ஒப்பிட்டு பேசியது பலருக்கும் சிரிப்பிற்கிடமாக இருந்தபோதிலும், முன்னணியின் தலைவர் தனது கொள்கையில் உறுதியாக இருப்பதை வைத்துத்தான் அவர் அப்படிச் சொல்கிறார் என்று நினைத்தவர்களும் உண்டு.
ஒருநாடு இரு தேசம் என்ற தமது கொள்கையில் அவர்கள் உறுதியாக இருப்பது பாராட்டுக்குரியதுதான், அதற்காக அதேகொள்கையைத்தான் விடுதலைப் புலிகளும் கொண்டிருந்தார்கள் என்று முன்னணியின் செயலாளர் செல்லையா கஜேந்திரன் இப்போது தெரிவித்திருப்பதைப் பார்க்கின்றபோது, அவர்களும் இப்போது மற்றைய அரசியல்வாதிகளுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.
விடுதலைப் புலிகள் ஆயுதத்தில் மாத்திரமே நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அவர்கள் அரசியல் தீர்வு ஒன்றிற்கு எந்தக் கட்டத்திலும் வரப்போவதில்லை என்று, அரசாங்கம் சர்வதேசத்தை புலிகளுக்கு எதிராக அணிதிரட்ட எடுத்த சதியை முறியடிக்க, புலிகள் தமிழீழத்திற்கு நிகரான தீர்வை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகக் கூறியே பேச்சுவர்த்தைக்கு முன்வந்திருந்தார்கள் என்பது தெரிந்ததுதான். ஆனால், அதற்காக அவர்கள் தனிநாட்டுக்காக போராடவில்லை, தமிழர் தேசத்தை அங்கீகரிக்கவே போராடினார்கள் என்று அவர் கூறியிருப்பது புலிகள் மீதான சேறடிப்பு என்பதை புரிந்துகொள்ள அதிகம் ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை.
தனது கருத்து, சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர், அதுகுறித்து விளக்கமளித்த கஜேந்திரன், பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்:
“…விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்காக போராடிவந்த நிலையில், அரசுடன் நேரடியாக இடம்பெற்ற பேச்சுக்களிலும் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இடம்பெற்ற பேச்சுக்களின்போதும் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கக்கூடிய தீர்வை அரசுத் தரப்பு முன்வைத்தால் பரிசீலிக்கத் தயாராக இருந்தார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்த முற்பட்ட வேளையில், நான் கூறிய கருத்துக்களானவை, விடுதலைப் புலிகள் தனிநாட்டுக்காக போராடவில்லை என தவறாக அர்த்தப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. தெளிவற்ற வகையில் அந்தக் கருத்து வெளிவந்தமைக்காக நான் மனம் வருந்துகின்றேன்.”
மேற்கண்டவாறுதான் தனது மன்னிப்பு அறிக்கையில் கஜேந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
‘டான் ரிவி’யில் சுரேஸ் பிரேமச்சந்திரனுடனான நிகழ்ச்சியில் சுரேஸ், “2009 வரை தனி நாட்டுக்கான யுத்தம் ஒன்று நடக்கிறது. தனி நாட்டுக்கான யுத்தம் நடக்கும்போது எல்லோருக்கும் ஓர் எதிர் பார்ப்பு இருந்தது.” என்று கூறிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட கஜேந்திரன் எம். பி., “தனிநாட்டுக்கான யுத்தம் அல்ல, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான யுத்தம்” என்றார். அத்துடன், “இவர்கள் (சுரேஸ்), அரசாங்கம் புலிகளை அழித்தது சரியென்று சொல்லப் பார்க்கிறார்” என்றும் கூறினார். இதன்மூலம் அவர் சொல்ல வருவது, புலிகள் தனிநாடு கேட்டுத்தான் போராடினார்கள் என்றால் அது புலிகளை அரசு அழித்தது சரி என்றாகிவிடும். அப்படியல்ல, அவர்கள் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கவே போராடினார்கள் என்கிறார் கஜேந்திரன்.
அவரது கருத்துக்கும், மறுப்பு அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. புலிகள், பேச்சுவார்த்தை மேசையில் தனிநாட்டுக்கு நிகரான தீர்வை முன்வைத்தால் பரிசீலிக்க தயாராக இருக்கிறோம் என்று சொன்னார்களே தவிர, தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கக்கூடிய தீர்வை பரிசீலிக்கத் தாயராக இருந்தார்கள் என்பது சரியானதல்ல.
ஒருவர் தனது மனதில் என்ன நினைக்கின்றார் என்பதை அறியவேண்டும் என்றால், அவரை நன்றாக மதுஅருந்த வைத்துவிட்டு அவரைக் கிளறினால் அடிமனதில் இருப்பதை அறிந்துகொள்ளலாம் என்பார்கள். மதுபோதை ஊட்டுவதும், ஒருவரை கோபப்படுத்துவதும் ஒன்றானதுதான். ஒருவரை கோபப்படுத்துவதாலும் அவரின் அடிமனதை அறியலாம் என்பார்கள்.
கோபப்படுத்தி, சுரேஸ் அவரின் ஆழ்மனதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.
– ஊர்க்குருவி