33 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கின் தெரிவு என்றே பலரும் கருதுவதுண்டு.
அவர் எப்போதும் மேற்குக்கு ஆதரவான ஆள் என்பது பலரின் கணிப்பு.
மேற்கு என்றால் நமக்கு நினைவுக்கு வருவது அமெரிக்காதான்.
மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தபோது அவரை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதற்காக மைத்திரியை வேட்பாளராக்கி வெற்றி பெறவைத்ததில் அல்லது மகிந்தவை தோற்கடித்ததில் மேற்கின் பலம் பிரயோகிக்கப்பட்டதும் மேற்கோடு இந்தியாவும் கைகோர்த்திருந்ததும் இரகசியமானதல்ல.
தான் தோற்றுப்போனதற்கு இந்திய உளவுத்துறைதான் காரணம் என்று மகிந்தர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டியதும் நாம் கண்டதுதான்.
மேற்கும் இந்தியாவும் ஓரணியில் நின்றது காரணம் வேறொன்றுமல்ல.
சீனாவின் ஆதிக்கத்தை வீழ்த்துவதற்காகத்தான்.
கோட்டாபய பதவியிலிருந்து விலகுவதென்று முடிவெடுத்ததும் அவரோடு அப்போது தொடர்பிலிருந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், அவர் பதவி விலகுவதற்கு முன்னதாக அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவரை பதவி விலகுமாறு கேட்டிருந்தது பற்றி நேற்றைய இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
கோட்டா ஜனாதிபதி பதவியில் இருக்கும்போதே ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியிருந்தாலும் பின்னர் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக பாராளுமன்றத்தில் நடந்த தேர்தலில் மகிந்த தரப்பு தமது வேட்பாளராக ரணிலையே தெரிவுசெய்திருக்கும் என்பதும் அவரே வெற்றியும் பெற்றிருப்பார் என்பதும் தெரிந்ததுதான்.
அப்படியிருக்கையில் எதற்காக இந்தியா அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு கோட்டாவை பதவி விலகச் சொன்னது என்பது புரியவில்லை.
இப்போது அதுவல்ல, நாம் சொல்ல வருவது.
ரணில் ஆட்சியில் இருப்பதை இந்தியா விரும்பவில்லை என்பது தெளிவாக தெரியவந்திருக்கின்றது.
அதனால்தான் பாராளுமன்றத்தில் நடந்த தேர்தலில் ரணிலுக்கு எதிராக களம் இறங்கியிருந்த டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்குமாறு கூட்டமைப்பிடம் கேட்டதாகவும் அப்போது கூறப்பட்டது.
ரணில் ஆட்சியில் இருப்பதை இந்தியா விரும்பாததால்தான் இன்றுவரை அவர் புதுடில்லி செல்வதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதைவிட, அவரின் கோரிக்கையை உதாசீனம் செய்து வருகின்றது.
இந்தியாவின் நிலைதான் இது என்றால், மேற்கு- அதுதான் அமெரிக்காவின் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கின்றது.
ஒருவர் நாட்டின் அதிபராகவோ அல்லது பிரதமராகவோ பதவியேற்றதும் சம்பிரதாயபூர்வமாக அவரை வாழ்த்துவதை அமெரிக்கா வழமையாகக் கொண்டிருக்கின்றது.
ஆனால், ரணில் பதவியேற்ற பின்னர் அந்த வழக்கமான வாழ்த்துக்கூட அமெரிக்க தரப்பிலிருந்து வரவில்லை.
அதைவிட முக்கியமானது, அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங் அம்மையாருடன் ரணில் மோதல் போக்கை கொண்டிருப்பதும் ஒரு சந்தர்ப்பத்தில் நேடியாகவே அவருடன் முரண்பட்டுக் கொண்டதையும் செய்திகளில் பார்த்தோம்.
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சி தோல்வி அடையும் என்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியே அந்தத் தேர்தலில் வெற்றிபெறும் என்றும் ஜனாதிபதி ரணிலின் ஆலோசகர்கள் அவருக்கு தெரிவித்திருந்தனர் எனவும் கூறப்பட்டது.
குடியரசுக் கட்சி செனட் சபையிலும் பாராளுமன்றத்திலும் ஆட்சியைக் கைப்பற்றினால் தனக்கான அங்கீகாரத்தை பெறுவது சுலபமானது என்ற எண்ணத்தில் இருந்த ஜனாதிபதி தரப்புக்கு தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளித்துள்ளதாகவும் இதனால், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிக்க ரணில் இப்போது ஆர்வம் காட்டிவருவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க இடைக்கால தேர்தலில் பைடனின் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்ற பின்னர், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி- இருபது மாநாட்டில் கலந்துகொண்ட பைடன், சீன அதிபருடன் மிக நட்புரீதியாக பேச்சு நடத்தியிருப்பதும் ரணில் தரப்புக்கு நல்ல அறிகுறி அல்ல என்கின்றன அந்த வட்டாரங்கள்.
இந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலோ, மனித உரிமை மீறல்களை தொடர்ந்தாலோ வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரரை மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தாலோ அனைத்துலக சமூகத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்று இப்போது ரணில் தரப்புக்கு சொல்லப்பட்டிருக்கின்றதாம்.
இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எப்படியாவது இந்தியாவின் ஆதரவை பெற்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருக்கும்
ஜனாதிபதி அதற்காக பகீரதப் பிரயத்தனம் செய்துவருகின்றார்.
இன்று இலங்கை ஆட்சியை இலங்கை மக்கள் தீர்மானிக்கவில்லை என்பதையே நடக்கும் சம்பவங்கள் புலப்படுத்துகின்றன.!

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles