உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன.
எதிர்வரும் மார்ச் ஒன்பதாம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவும் அறிவித்து விட்டது.
ஆனாலும் தேர்தல் நியமனப் பத்திரங்களை தாக்கல்செய்த கட்சிகள் – வேட்பாளர்கள் இன்னமும் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட ஆரம்பத்திலிருந்து அனைத்து தரப்பினருக்கும் இந்த சந்தேகம் இருந்தது.
அதனால்தான் யாருமே தேர்தல் தொடர்பான பணிகளை ஆரம்பித்திருக்கவில்லை.
அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி அரச அலுவலகங்களிலும் இதேநிலைதான்.
கடந்த பல ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட்டுவரும் கட்சி ஒன்றின் தலைவர் சொன்னார் வேட்புமனு தக்கல் செய்யும்போது அலுவலகத்தில் எல்லாமே
ஒழுங்கமைக்காததுபோல இருந்ததாக.
வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட பின்னர், ஜனாதிபதி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று இன்னமும் பலரை குழப்பத்திலேயே ஆழ்த்தியிருக்கின்றது.
தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு அமைய உள்ளூராட்சி தேர்தல்களை உரிய திகதியில் நடத்த வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என்று தெரிவித்துள்ள அவர், தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
அதாவது தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை என்று அவர் சொல்லியிருப்பது அப்படியோர் எண்ணம் இனி அவருக்கு வரலாமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஏற்கனவே, தேர்தல் நடத்தினால் மீண்டும் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் நிலைமை வரலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையை ஒட்டி மின்வெட்டை நடைமுறைப்படுத்த அரசு விரும்பாதபோதிலும் அவ்வாறு மின்வெட்டை இல்லாமல் செய்வதெனில் தினசரி பல கோடி ரூபாய் மின்சார சபைக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் அதனால் மின்சார தடையை தொடர முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கின்றது.
தேர்தல் செலவுக்காக நாணயம் அச்சிடப்படமாட்டது என்று திறைசேரி கூறியிருக்கின்றது.
அதேவேளை அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை கொடுக்க பணம் இல்லை என்பதால், பகுதி பகுதியாக சம்பளம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் எல்லாவற்றிலுமே நெருக்கடி பற்றியே பேசப்படுகின்றது.
பேசப்படுவது மாத்திரமன்றி, அவற்றால் மக்களுக்கு நெருக்கடி ஏற்படுகின்ற அளவுக்கு நிலைமை சென்றுகொண்டிருக்க தேர்தலுக்கான செலவை எப்படி இந்த நாடு ஈடுசெய்யப் போகின்றது என்பது குறித்தே அனைத்து தரப்பினரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையிலேயே தேர்தல் பிரச்சாரம் தொடங்கவிருக்கின்றது.
ஏற்கனவே நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த பின்னர், எரிபொருளின் விலையேற்றம், அதன் பாவனையை கட்டுப்படுத்தியதால் அதன் இறக்குமதியை அரைவாசியாகக் குறைத்திருந்தது.
ஆனால், எட்டாயிரம் உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக நடக்கவிருக்கும் இந்த உள்ளூராட்சி தேர்தலில் பல ஆயிரம் பேர் களத்தில் உள்ளனர்.
அவர்கள் எல்லோரும் தத்தமது வட்டாரங்களில் தேர்தல் பணிக்காக ஓடித்திரிவதற்காக வாகனங்களை பயன்படுத்த – எரிபொருளின் தேவை பல மடங்கு அதிகரிக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே.
அவ்வாறான நிலைமை ஏற்படும்போது மீண்டும் எரிபொருளுக்கு வரிசைகள் தோன்றுவதையும் தடுக்கமுடியாமல் போகலாம்.
இதற்கு முன்னர் நடைபெற்றிருந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட பொலிஸாருக்கான மேலதிக நேர கடமைக்குரிய கொடுப்பனவுகள் இன்னமும் கொடுக்கப்படவில்லை என்கிறார் பொலிஸ் மா அதிபர்.
தேர்தலுக்காக நாணயத்தை அச்சிடமுடியாது என்றும் புதிதாக நாணயத்தாள்கள் அச்சிடக்கூடாது என்று நாணய நிதியம் கட்டுப்பாடு விதித்திருக்கின்றது என்கிறார் மத்திய வங்கி அதிகாரி.
தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பயன்படுத்தும் மை இந்தியாவின் கடன்திட்டத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்கிறது மற்றுமொரு செய்தி.
பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டிருக்கின்றதாம்.
காரணம் வேறு ஒன்றுமில்லை.
ஒப்பந்தகாரர்களுக்கு கொடுக்கவேண்டிய இருபது வீத முற்பணத்தை செலுத்த பணம் இல்லையாம்.
தினமும் கிடைக்கின்ற செய்திகளைப் பார்த்தால் தேர்தலால் இத்தனை நெருக்கடிகளை மக்கள் சந்திக்கவேண்டும் என்றால், தேர்தலே வேண்டாம் என்று மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என்று அரசு எதிர்பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதனால்தான் ஜனாதிபதியும் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை என்றிருக்கிறார்.
சிலவேளை அப்படியோர் எண்ணம் நாளை வருகின்றதோ தெரியவில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம்.
- ஊர்க்குருவி