இப்படியும் நடக்கிறது…!

0
168

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் திட்டமிட்டவாறு மார்ச் ஒன்பதாம் திகதி நடைபெற்றிருந்தால் யார் அதிகம் வாக்குகளைப் பெற்றிருப்பார்கள் என்பதே இன்று தெற்கில் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பேசப்படுகின்ற பொருள் ஆகியிருக்கின்றது.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே மக்கள் மத்தியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தி என்ற ஜே. வி. பியினரும் மாத்திரமே.
சில சுதந்திரமான மக்கள் கருத்துக்கணிப்புக்கள், ஜே.வி.பி. முப்பத்தியிரண்டு வீத ஆதரவையும் ஐக்கிய மக்கள் சக்தி முப்பத்தி ஒரு வீத ஆதரவையும் கொண்டிருக்கின்றன என்று தெரிவித்திருந்தன.
ஒரு கட்டத்தில் சுமார் நாற்பது வீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆதரவுடன் ஜே.வி.பி. இருந்ததாகவும் சிறீலங்கா பொதுஜன பெரமுன பிரசாரத்தை ஆரம்பித்ததும் ஜே.வி.பியின் ஆதரவுத்தளம் மெல்ல மெல்ல குறைந்து முப்பத்தியிரண்டு வீதத்தை அடைந்ததாகவும் சில தகவல்கள் தெரிவித்திருந்தன.
ஆக, கிராமப்புறங்களில் பொதுஜன பெரமுன முற்றாக துடைத்தெறியப்பட்டுவிட்டது என்பது தவறான கணிப்பு என்பதை இந்தப் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றபோதிலும், ஜே.வி.பியின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் எவருமே இல்லாததாலேயே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது பற்றி பலரும் கீறல் விழுந்த ‘றெக்கோட்’ போல சொல்லிக்கொண்டிருந்தாலும், உள்ளூர அவர்களும் அதுபற்றி மகிழ்ந்துகொண்டிருப்பதாகவே தெற்கில் அரசியல் அவதானிகள் மத்தியில் பேசப்படுகின்றது.
போதாக்குறையாக, ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியாததைத் தொடர்ந்து அவர்களும் சற்று குழப்பமடைந்த நிலையிலேயே இருக்கின்றனர்.
தேர்தல் ஒன்று நடைபெறுமானால், தற்போதைய ஆட்சியாளர்கள் மக்கள் ஆதரவை இழந்துவிட்டனர் என்பது நிரூபணமாகுமே தவிர, அடுத்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலோ அல்லது ஜனாதிபதி தேர்தலிலோ எவருமே அறுதிப் பொரும்பான்மையை பெறப்போவதில்லை என்பது நிச்சயம் அனைவருக்கும் தெரியவரும்.
இது தற்போதைய கட்சிகள், அணிகளிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர உதவுமே தவிர வேறு எதனையும் ஏற்படுத்தப்போவதில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை அவரின் இலக்கு ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே.
ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறுமானால் இன்றைய நிலவரங்களின்படி மூவர் களம் இறங்குவது உறுதி.
ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெர முனவின் ஆதரவுடன் களம் இறங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திஸநாயக்கா ஆகிய மூவரும் களம் இறங்குவது ஓரளவுக்கு உறுதியானதுதான்.
ஆனால், சுதந்திரக் கட்சி மற்றும் விமல் கூட்டணி, டலஸ் கட்சி என்று சிறிய சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்றாகக் கூட்டணி அமைத்து ஒரு வேட்பாளரை களம் இறக்குவார்களா அல்லது சஜித்துடன் கூட்டுச் சேர்வார்களா என்பது தேர்தல் நெருங்குகின்ற வேளையில்தான் தெரியவரலாம்.
என்னதான் இருந்தாலும் இந்த மூவரில் யார் இன்றைய நிலையில் நாட்டுக்கு பொருத்தமானவர் என்பதில் மக்களுக்கு ஒரு தெளிவான தெரிவு இருக்கும் என்றே ரணில் நம்புகிறார் என்று தெரிகின்றது.
அதனால்தான் அவர் ஜனாதிபதி தேர்தல் பற்றி மாத்திரமே அக்கறைகொண்டிருப்பதாகத் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றார்.
என்ன விலைகொடுத்தாவது, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு, நாட்டை கடன் வாங்கும் தகுதி உள்ள நாடாக மாற்றிவிட்டாலே கடன் மூலமாவது டொலர் கையிருப்பை அதிகரித்து, ரூபாயின் பெறுமதியை வலுகட்டாயமாகவாவது கூட்டிக்கொண்டு டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பை அதிகரிக்கப் பண்ணினாலே பொருட்களின் விலைகள் குறையும், வெளித் தோற்றத்திற்காவது பொருளாதார நெருக்கடியை சரி செய்ததுபோல மக்களை நம்பவைக்கலாம் என்று ரணில் கணக்குப் போடுகிறார் என்கிறார்கள் அவரை
அறிந்தவர்கள்.
அண்மையில், சில நாட்களாகவே டொலர் கையிருப்பில் எந்த மாற்றமும் ஏற்படாதபோதிலும், தனியார் வங்கிகள் ‘கிறெடிற் கார்ட்’கள் மூலம் டொலர்களை அனுப்புவதற்கான வரம்பு எல்லையை அதிகரித்திருக்கின்றன.
வாரத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய்க்கு நிகரான டொலர்களையே அனுப்பமுடியும் என்றிருந்த வரம்பு இப்போது பத்து இலட்சமாகியிருக்கின்றது.
இவை எல்லாம் மத்தியதர வர்க்கத்தினரை இலக்குவைத்து செய்யப்படும் கைங்கரியங்கள் என்பது புரிந்துகொள்ளக்கூடியதே.
ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக பொது வேட்பாளரைக் களம் இறக்கி, அவரை தோற்கடிக்க மேற்கும் இந்தியாவும் முன்னர் காய்நகர்த்தின.
போகிற போக்கைப் பார்த்தால், ஜே.வி.பி. வந்துவிடக்கூடாது என்பதற்காக ரணில் பொதுவேட்பாளராக களம் இறங்கினாலும் ஆச்சரியத்திற்கு உரியதல்ல என்கின்றன தெற்கின் அரசியல் வட்டாரங்கள்.!

  • ஊர்க்குருவி