இப்படியும் நடக்கிறது…!

0
187

நாட்டில் எரிபொருளுக்கான வரிசைகள் குறைந்து கொண்டிருக்கின்றன.
எரிவாயு இப்போது தாராளமாக இல்லாவிட்டாலும் சற்று கிடைக்கின்றது.
மின் தடை நேற்று முற்றாக தளர்த்தப்பட்டிருந்தது.
கடந்த பல மாதங்களாக நெருக்கடியிலிருந்த நாடு சற்று தற்காலிகமாகவேனும் மீண்டுவருவதுபோல மக்களுக்கு தெரிகின்றது.
இவையெல்லாம் கடந்த ஒன்பதாம் திகதிக்கு மக்களை திரட்டி மீண்டும் ஒரு களேபரத்தை ஏற்படுத்த சிலர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிய காரணமாகியிருந்தன.
இதனால் சிங்கப்பூரிலிருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் தாயகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அவர் நாட்டைவிட்டு வெளியேறியதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், அவரை உடன் நாடுதிரும்புமாறும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ கேட்டிருப்பதாகவும் சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்திருந்தன.
அதன்மூலம் அவர் வெளிநாடு சென்றபோது மகிந்தருடன் கலந்தாலோசிக்கவில்லை என்பது தெரிந்தது. இதனால் நேற்றுடன் சிங்கப்பூர் விசா முடிவடைவதால் நாடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் உடனடியாக நாடு திரும்புவது அவரது பாதுகாப்பிற்கு நல்லதல்ல என்று பாதுகாப்பு தரப்பு ஆலோசனை வழங்கியதாகவும், அதனையடுத்து அவர் மேலும் சில நாட்களுக்கு
சிங்கப்பூரிலேயே தங்கியிருக்க அனுமதிக்குமாறு இலங்கை தூதரகத்தின் ஊடாக அரசு கோரிக்கை விடுக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தபோதிலும் அவர் தற்போது தாய்லாந்துக்கு செல்லவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் தாய்லாந்து வரவிருப்பதாக தாய்லாந்து அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்ததைத் தொடந்து பல்வேறு ஊகங்களும் ரெக்கைகட்டி பறக்கத் தொடங்கியிருக்கின்றன.
அவர் நாடு திரும்பிய பின்னர் மீண்டும் அரசியலுக்கு கொண்டுவருவதற்கு பொதுஜன பெரமுன கட்சிக்காரர்கள் முயன்றுவருவதாகவும் அவர் நாடு திரும்பிய பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் அவர் இன்னமும் சில மாதங்கள் வெளியே இருக்கப்போகின்றார் என்பதை மட்டுமே அவரது தாய்லாந்து பயணம் உணர்த்துகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விடயங்களுக்குப் பொறுப்பாக இருந்தவரான கேபி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதன், மலேசியாவில் வைத்தே கைதுசெய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் அப்போதும் ஒரு தாய்லாந்து பிரஜையாகவே அறியப்பட்டிருந்தார்.
தாய்லாந்திலேயே நீண்டகாலம் வாழ்ந்த கேபி, தாய்லாந்து பெண் ஒருவரையே திருமணம் செய்திருந்தார்.
அவர் புலிகள் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்தபோது, ஒரு தடவை கேபியை தாய்லாந்து பொலிசார் கைதுசெய்திருப்பதாக செய்திகள் வெளிவந்ததும், அதனையடுத்து அவரை விடுவிக்க புலிகள் தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டதும் பழைய சங்கதிகள்.
அந்தக் கைது பற்றி பல கதைகளும் பேசப்பட்டதுண்டு.
ஆனால் அந்த சம்பவத்தின் பின்னர் அப்போது தாய்லாந்தின் பிரதமருடன் கேபி குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்புகள் எற்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளிவந்ததுண்டு.
இந்நிலையிலேயே, கோட்டாபய தாய்லாந்து போகின்றார் என்றதும் கேபியின் எற்பாட்டிலேயே அவர் தாய்லாந்து போகின்றார் என்று சிங்கள ஊடகங்கள் ஊகங்களை வெளியிட ஆரம்பித்திருக்கின்றன.
மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து அவர் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய பற்றி பல்வேறு நம்பிக்கைகளை வெளியிட்டுவந்தவர்.
கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்றதும் அவர்பற்றி கேபி வெளியிட்ட அறிக்கை பிரபல்யமானது. அவரின் திறமைகளை மெச்சியிருந்த கேபி, அவர் நாட்டை திறம்பட நிர்வகிப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் நடந்தது வேறு கதை.
ஆனால் அதற்காக அவர் தாய்லாந்து போவதற்கு கேபிதான் உதவவேண்டும் என்பதல்ல.
இலங்கைப் பிரஜை ஒருவர் தாய்லாந்து போவதும் அங்கே சில காலம் வாழ்வது என்பதும் பெரிய விடயமல்லவே.
அதற்கு எதற்காக கேபியை சம்பந்தப்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை.!