இஸ்ரேலிய படையினர் அம்புலன்ஸ் மீது தாக்குதலை மேற்கொண்டு ஒரு வாரத்தின் பின்னர் மருத்துவ பணியாளர்களின் உடல்கள் மீட்பு – செஞ்சிலுவை சங்கம் கடும் சீற்றம் – இது எப்போது முடிவிற்கு வரும் என கேள்வி?

0
21

இஸ்ரேலிய படையினர் அம்புலன்ஸ்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு ஒரு வாரத்தின் பின்னர் 8 மருத்துவபணியாளர்களின் உடல்கள் உட்பட 14 உடல்கள் காசாவின் தென்பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செம்பிறை குழுவும், செஞ்சிலுவை குழுவும் தெரிவித்துள்ளன.

சர்வதேச செம்பிறை மற்றும் செஞ்சிலுவை குழுக்களை சேர்ந்த மருத்துவபணியாளர்களின் உடல்களே மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்புலன்ஸ்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டு ஏழு நாட்கள் மௌனத்திற்கு பின்னர் இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள செம்பிறை குழுவும், செஞ்சிலுவை குழுவும் கடந்த ஒரு வாரகாலமாக தாக்குதல் இடம்பெற்ற ரபாவிற்கு தாங்கள் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளன.

8 மருத்துவபணியாளர்களின் உடல்களுடன்  காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் ஆறு பேரின் உடல்களையும் மீட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட உடல்களில்  ஐக்கிய நாடுகளின் ஊழியர் ஒருவரின் உடலும் உள்ளதாகவும் பாலஸ்தீன செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது.

ஒரு மருத்துவபணியாளரை காணவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு தங்கள் மருத்துவ சகாக்கள் சடலங்களாக மீட்கப்பட்டமை குறித்து கடும் சீற்றம் வெளியிட்டுள்ளதுடன் இது எப்போது முடிவிற்கு வரும் என கேள்வி எழுப்பியுள்ளது.

நான் மனமுடைந்துபோயுள்ளேன்,என தெரிவித்துள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்க மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஜகன் சப்பகெய்ன் இந்த அர்ப்பணிப்புள்ள  அம்புலன்ஸ் பணியாளர்கள் காயமடைந்த மக்களை காப்பாற்ற சென்றுகொண்டிருந்தார்கள்,அவர்களின் வாகனங்கள் மீது இலச்சினை காணப்பட்டது அது அவர்களை பாதுகாத்திருக்க வேண்டும்,அம்புலன்ஸ்களில் தெளிவாக செஞ்சிலுவை என குறிப்பிடப்பட்டிருந்தது,அவர்கள் அவர்களின் குடும்பத்தவர்களிடம் பாதுகாப்பாக போய்சேர்ந்திருக்கவேண்டும் ஆனால் அது நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.