ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவேன் எனவும் ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் சஜித் போட்டியிடமாட்டார் என்ற போலிச் செய்தி கட்டமைக்கப்பட்டு வருகின்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலையீட்டில் விவசாயத்திற்கு விடியல் வேலைத்திட்டத்தின் கீழ் 40 வருடங்களின் பின்னர் கிரிந்தி ஓயா திட்டத்திற்குச்
சொந்தமான தெற்கு கால்வாயை புனரமைக்கும் பணியில் பங்கேற்று பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘அரசாங்கப் பிரதிநிதிகளின் குழு ஒன்று ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் சஜித் போட்டியிடமாட்டார் என்ற போலிச் செய்தியை
கட்டமைத்துவருகின்றது. நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது கோட்டாபயவுடன் உடன்படிக்கை செய்துகொண்டு என்னைத் தோற்கடிக்க முயற்சித்தவர்களே இவ்வாறு கூறிவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்பதே இவர்களுக்கு நான் கூறக்கூடிய பதில்.
நான் மரணத்திற்குப் பயப்படும் கோழை அல்ல. எந்தவொரு சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். ராஜபக்ஷவுடன் ஒருபோதும் ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை நான் மேற்கொள்ளவில்லை. அத்துடன், இன்று நாட்டில் உணவுப்பாதுகாப்பை விடுத்து உணவுப் பாதுகாப்பின்மையே ஏற்பட்டுள்ளது. நாட்டின் நீர்ப்பாசன முறைமைகளை முற்றாக புனரமைப்பதே எனது முதல் படி. நாடாளுமன்ற சட்டமூலங்கள் தனிநபர் பிரேரணை முன்மொழிவாக கொண்டுவரப்படுகின்றன.
என்றாலும் அதை நிறைவேற்ற ஆளுங்கட்சியின் ஆதரவு தேவை. எந்நிலையிலும் நெல்லுக்கு உத்தரவாதவிலை தரும் விலைச் சூத்திரத்தை வழங்கத் தயாராக இல்லாத இந்த அரசை விவசாய விரோத அரசு என்றே அழைக்கலாம். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரச தலைவர்கள் விவசாயிகளை அவமானப்படுத்தி விமான நிலையங்களில் கூட அரிசியை களஞ்சியப்படுத்திவைத்தனர். எனது வாக்குகளைக் குறைப்பதற்காகவே இவ்வாறான சதியை மேற்கொண்டனர்.’ என்று தெரிவித்தார்.