சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் திட்டத்தின் முதல் மதிப்பீடு செப்டெம்பர் 14 முதல் 24 வரை நடத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை யட்டியந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகைத் தரவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு தாம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், நிலைமைக்கு முகங்கொடுக்கும் வகையில் பேச்சுவார்த்தைச் சுற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இறுதிக் கலந்துரையாடல் அநேகமாக ஜனாதிபதியுடன் நடத்தப்படும் எனவும் இறுதிக்கட்ட கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிந்த பின்னர் இரண்டாம் தவணை விரிவான கடனுதவி பெறப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.