காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடரும் நிலையில் அங்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் முடக்கத்தால் உணவு மற்றும் எரிபொருளுக்கு ஏற்பட்டிக்கும் கடுமையான பற்றாக்குறை காரணமாக மீட்புப் பணிகள் நிறுத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
காசாவில் மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருப்பதை மறுத்துவரும் இஸ்ரேல் படை நடவடிக்கையை விரிவுபடுத்தும் திட்டத்தை அறிவித்திருப்பதோடு நேற்று (08) காலை தொடக்கம் நடத்திய தாக்குதல்களில் மேலும் 14 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
‘டீசல் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக செயற்பாட்டில் உள்ள எழுபத்து ஐந்து வீதமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன’ என்று காசா சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனம் காசாவில் அவசர மீட்புப் பணியில் முக்கிய பங்காற்றி வரும் நிலையில், மின் பிறப்பாக்கிகள் மற்றும் ஒட்சிசன் சாதனங்களுக்கும் கடும் பற்றாக்குறை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவுக்கான உதவி விநியோகத்தை இஸ்ரேல் கடந்த மார்ச் 2 ஆம் திகதி தொடக்கம் முற்றாக முடக்கி உள்ளது. இந்நிலையில் அங்கு எரிபொருள் மற்றும் மருந்துகள் தொடக்கம் உணவு மற்றும் சுத்தமான நீர் வரை அனைத்து விநியோகங்களும் தீர்ந்து வருவதாக ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் மற்ற மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.
போதிய உணவு இல்லாததால் ஐ.நா ஆதரவு உணவு விநியோக மையங்கள் மூடப்பட்டதை அடுத்து காசாவில் உள்ள சிறுவர்களிடம் பட்டினி, நோய் மற்றும் உயிரிழப்பு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக ஐ.நாவின் சிறுவர்களுக்கான நிறுவனமான யுனிசெப் எச்சரித்துள்ளது.
காசாவில் பலஸ்தீனர்களின் அழிவை ‘தடுக்க’ நடவடிக்கை எடுக்கும்படி ஐ.நா மனித உரிமை கவுன்சிலினால் பணியமர்த்தப்பட்ட 20இற்கும் மேற்பட்ட சுயாதீன நிபுணர்கள் கடந்த புதன்கிழமை வலியுறுத்தி இருந்தனர்.
காசாவின் தெற்கு நகரான கான் யூனிஸில் உள்ள கள வைத்தியசாலை ஒன்றில் இரத்ததானம் அளிக்க மக்கள் வரிசையில் காத்திருந்ததாக அங்குள்ள ஏ.எப்.பி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். ‘இந்த சிக்கலான நேரத்தில், உணவுப் பற்றாக்குறை மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாத நிலையில் காயமடைந்த மற்றும் சுகவீனமுற்றிருப்பவர்களுக்கு இரத்த தானம் அளித்து நாம் உதவி அளிக்கிறோம்’ என்று இவ்வாறு வரிசையில் இருந்த மோமன் அல் ஈத் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் இரண்டு மாதங்கள் நீடித்த போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து கடந்த மார்ச் 18 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேல் தனது உக்கிர தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. வடக்கு காசாவின் பெயித் லஹியாவில் உள்ள ரியான் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டின் மீது இஸ்ரேல் நேற்றுக் காலை நடத்திய செல் குண்டு தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.
இதன்போது இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் ஒருவரை மீட்பதற்கு மீட்பாளர்கள் போராடியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்கு காசா நகரான கான் யூனிஸில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள கூடாரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய பீராங்கி தாக்குதலில் சிறுமி ஒருவர் கொல்லப்பட்டு மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். நேற்றுக் காலை தொடக்கம் இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்களில் 14 பலஸ்தீனர்கள் பலியாகி இருப்பதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
முந்தைய 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 100 பலஸ்தீனர்கள் வரை கொல்லப்பட்ட நிலையிலேயே அங்கு இடைவிடாது தாக்குதல்கள் தொடர்கின்றன. கடந்த 2023 ஒக்டோபரில் காசா போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் காசாவில் இதுரை 52,600க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை காசாவில் பலஸ்தீனர்கள் 30 வீதமான நிலப்பகுதிக்குள் சுருக்கப்பட்டிருப்பதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. காசா நிலப்பகுதியில் மக்கள் செல்ல முடியாத தடை வலயங்களை இஸ்ரேல் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் சனநெரிசலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை எகிப்து எல்லையை ஒட்டிய காசாவின் ரபா நகரின் சுமார் 80 வீதமான கட்டடங்கள் மற்றும் அகதி முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டு இருப்பதாக செய்மதி படங்களை மேற்கோள்காட்டி இஸ்ரேலின் ‘சென்னல் 12’ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அழிவுகள் காசா பகுதியை மக்கள் வாழ முடியாத இடமாக மாற்றும் கொள்கை அடிப்படையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.