காஸாவில் உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் தாக்குதல்! 4 குழந்தைகள் பலி!!

0
20

மத்திய காஸாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஐவர் உயிரிழந்தனர்.

இதேவேளை, காஸாவில் உள்ள குடும்பங்கள் தொடர்ந்து மோசமான நிலைமைகளை எதிர்கொள்கின்றன என்று ஐ. நா. கவலை வெளியிட்டுள்ளது.

மேலும், வடக்கு காஸாவின் பெய்ட் லஹியா நகரில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் மூன்று மருத்துவர்கள் காயமடைந்தனர். இது அண்மையில் மருத்துவ கட்டமைப்பின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய ஐந்தாவது தாக்குதல் எனக் கூறப்படுகிறது.

காஸாவில் நீடிக்கும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் மக்கள் உணவுக்காக பல கிலோ மீற்றர்கள் நடந்து செல்கின்றனர். ஒவ்வொரு நாளும், கடைகள் திறக்கப்பட்ட பிறகு ரொட்டி துண்டுகளை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நிற்கின்றனர்.

இதனிடையே ஹாடெம் குல்லாப் என்ற பலஸ்தீன நபர் கூறுகையில், “நான் ரொட்டி வாங்க சுமார் எட்டு கிலோ மீற்றர்கள் நடந்து சென்றேன்”என்றார் பசி மயக்கத்தில். “சந்தையில் மாவு இல்லை, உணவு இல்லை, காய்கறிகள் இல்லை” என்று 56 வயதான நாசர் அல் – ஷாவா புலம்புகிறார்.

பஞ்சத்தின் விளிம்பில் வாழும் மக்கள், உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், பாதிக்கும் மேற்பட்ட கட்டடங்கள் அழிக்கப்பட்ட நிலையில், மாவு ஆலைகள், மாவை சேமித்து வைக்கும் கிடங்குகள் மற்றும் தொழில்துறை பேக்கரிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் செயல்பட முடியவில்லை.

மற்றொரு பக்கம் இஸ்ரேல், காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை தடுப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஆனால், இஸ்ரேல் வழக்கம்போல இதனை மறுத்துள்ளது. காஸாவில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை பெறக்கூட போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடி போர் நிறுத்தம் தேவை என்று ஐ. நா. வலியுறுத்தி வருகின்றது.