கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களை கைதுசெய்ய உதவுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சந்தேக நபர்களின் புகைப்படங்களையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி போராட்டக்காரர்கள் என்ற பெயரில் ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களை கைதுசெய்வதற்காக கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளுக்கு அமைவாக பெற்றுக்கொள்ளப்பட்ட காணொளிகள், புகைப்படங்களுக்கு அமைவாக சந்தேக நபர்களை இனங்காண்பதற்கு உதவுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் பொதுமக்களை கோரியுள்ளனர்.
சந்தேக நபர்களாக அடையாளங் காண்பதற்காக 72 பேரின் புகைப்படங்களை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
புகைப்படங்களில் காண்பிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல் தெரியுமாயின் அதனை தெரியப்படுத்துவதற்கான அவசர தொலைபேசி இலக்கம் தொலைபேசி மற்றும் வட்சப் இலக்கங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ளது.
இதற்கமைவாக 011-2083049 என்ற தொலைபேசி இலக்கம், 075-6371563 என்ற வட்சப் இலக்கம் அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவல் தருமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.