சுகாதார விதிமுறைகளை மீறிய வெதுப்பகம் மற்றும் உணவகத்துக்கு அபராதம்

0
9

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய வெதுப்பகம் மற்றும் உணவகத்துக்கு மொத்தம் 70,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ப.தினேஸ், வெதுப்பக உரிமையாளர் மீது பின்வரும் குற்றச்சாட்டுகளின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார்:

*மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் வெதுப்பகப் பொருட்களைக் கையாண்டமை.

*தனிநபர் சுகாதாரத்தைப் பேணாமை.

*வெதுப்பகச் சூழலில் இலையான்கள் பரவுவதற்கு இடமளித்தமை.

*அழுகிய உருளைக்கிழங்குகளை உணவு தயாரிப்புக்கு களஞ்சியப்படுத்தியமை.

*வெதுப்பகப் பொருட்களுடன் தொற்று ஏற்படுத்தக்கூடிய வகையில் இரசாயனப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தியமை.

இவ்வழக்கு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து, நீதிமன்றம் உரிமையாளரை கடுமையாக எச்சரித்து 50,000 ரூபாய் அபராதம் விதித்தது. அதேபோல், உணவக உரிமையாளர் மீது பின்வரும் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது:

*மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் உணவைக் கையாண்டமை.

*தனிநபர் சுகாதாரத்தைப் பேணாமை.

*குடிநீர் மற்றும் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் நீர் குடிப்பதற்கு உகந்தது என உறுதிப்படுத்தத் தவறியமை.

*சமைத்த மற்றும் சமைக்கப்படாத உணவுப் பொருட்களை தொற்று ஏற்படுத்தும் வகையில் களஞ்சியப்படுத்தியமை.

இவ்வழக்கிலும் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் உரிமையாளரை கடுமையாக எச்சரித்து 20,000 ரூபாய் அபராதம் விதித்தது.