தனிநாட்டின் உண்மையான ஆதரவாளர்கள்?

0
167

22ஆவது திருத்தச் சட்டம் தென்பகுதியில் விவாதங்களை தோற்றுவித்திருக்கின்றது.
பொருளாதார நெருக்கடியாலும் அதனைத் தொடர்ந்து தென்பகுதியில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புக்களாலும் கீழ் நிலைக்கு சென்றிருந்த சிங்கள – பௌத்த அடிப்படைவாத சக்திகள் மெதுவாக வெளியில் வருகின்றன.
22ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அதன் மூலம் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் தனிநாட்டுக்கான வழிவரைபடத்தை ஊக்குவிக்க முயல்வதாகவும் குறித்த அடிப்படைவாத சக்திகள் கூக்குரலெழுப்ப ஆரம்பித்திருக்கின்றன.
சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் என அறியப்படும் மருத்துவர் குணதாச அமரசேகர 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்படுமாக இருந்தால் அதனை மக்கள் எதிர்ப்பார்கள் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
உண்மையில் சாதாரண சிங்கள மக்கள் இதனை எதிர்க்கவில்லை.
அடிப்படையில் மாகாண சபை முறைமையை மக்கள் ஆதரிக்கின்றனர்.
ஏனெனில், அதன் மூலம் சிங்கள மக்கள் நன்மை அடைந்திருக்கின்றனர்.
இந்தநிலையில் மாகாண சபை முறைமை மேலும் பலப்படுமாக இருந்தால், அதனால் சிங்கள மக்கள் இன்னும் அதிகமான நன்மைகளையே பெறுவர்.
ஆனால், இந்த உண்மைகளை சொல்வதற்கு மாறாக சிங்கள மக்களை தவறான திசையில் சிந்திக்கத் தூண்டும் வேலையையே குணதாச அமரசேகர போன்ற இனவாதிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் தனிநாட்டுக்கான கோரிக்கை திடீரென்று உருவாகிய ஒன்றல்ல.
ஐக்கிய இலங்கைக்குள் மிகவும் குறைவான அதிகாரங்களுக்கான கோரிக்கைகள் மறுக்கப்பட்ட சூழலிலேயே செல்வநாயகம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது.
அதில்கூட உறுதியான நிலைப்பாட்டை தமிழ் அரசியல்வாதிகள் கொண்டிருக்கவில்லை.
ஆனால், தமிழ் மிதவாதிகளின் குறைந்தபட்ச கோரிக்கைகள் அனைத்தும் மறுதலிக்கப்பட்ட சூழலில்தான் ஆயுத இயக்கங்கள் தமிழர் அரசியலை தம்வசப்படுத்தின.
உள்நாட்டுக்குள் சுமுகமாக தீர்த்துக் கொள்ளக்கூடிய பிரச்னையை சிங்கள ஆட்சியாளர்கள் புறக்கணித்ததன் காரணமாகவே இந்தியாவின் தலையீடு நிகழ்ந்தது.
இந்தியாவை நோக்கி தமிழர்கள் ஏன் சென்றனர்? இப்போதும் செல்கின்றனர்? இதற்கு யார் காரணம்? யுத்தம் நிறைவுற்று பதின்மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன.
இன்றுவரையில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் எவற்றையுமே சிங்கள ஆட்சியாளர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.
இந்த நிலையிலேயே சர்வதேச அழுத்தங்கள் தொடர்கின்றன.
சிங்கள இனவாதிகள், இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் தலையீடு செய்கின்றன என்று ஒப்பாரி வைக்கின்றன.
உண்மையில் இந்த அழுத்தங்கள் தொடர்வதற்கு யார் காரணம்? உள்நாட்டுக்குள் பிரச்னைகளை தீர்த்திருந்தால் அழுத்தங்கள் ஏன் தொடரப் போகின்றன? ஒரு மக்கள் கூட்டம் ஏன் பிரிந்து செல்ல வேண்டுமென்று எண்ணுகின்றது? அவ்வாறான சிந்தனையை ஊட்டுபவர்கள் யார்? தாங்கள் இரண்டாம் தர பிரஜைகளாக பார்க்கப்படுகின்றோம் – தங்களின் ஆகக் குறைந்த கோரிக்கைகள கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை – ஆகக் குறைந்தது அதனை பரிசீலிக்கும் மனநிலையில்கூட ஆளும் தரப்பினர் இல்லை என்பதிலிருந்தே தனிநாட்டு சிந்தனை தோற்றம் பெற்றது.
ஆனால், அதனை உறுதியாக எவருமே நம்பியதில்லை.
விடுதலைப் புலிகள் இருக்கும் வரையில் ஒரு சிறிய நம்பிக்கை பலரிடம் இருந்தது உண்மைதான்.
எப்போது விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டதோ அத்தோடு அதுவும் முடிந்துவிட்டது.
இந்த நிலையில் இன்றும் தனிநாட்டு சிந்தனையை எவராவது ஊக்குவிக்கின்றனர் என்றால், அது சிங்கள அடிப்படைவாதிகள் மட்டுமே.
அவர்கள்தான் மீண்டும், மீண்டும் தனிநாடு என்றொரு தீர்வு உண்டு என்பதை தமிழ் புதிய தலைமுறையினருக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர்.
13ஆவது திருத்தச் சட்டத்தைக்கூட முழுமையாக அமுல்படுத்த முடியாதவர்களிடம் என்ன தீர்வை எதிர்பார்ப்பது என்னும் கேள்வி எழுவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் காரணமல்ல மாறாக, சிங்கள – பௌத்த அடிப்படைவாதிகளான குணதாச அமரசேகர போன்றவர்களே! தனிநாட்டுக்கான உண்மையான ஆதரவாளர்கள் குணதாச அமரசேரக, நளின் டி சில்வா போன்றவர்கள்தான்.