தமிழ் கட்சிகள் வேற்றுமை மறந்து செயற்பட யாழ். மறை மாவட்ட ஆயர் அழைப்பு

0
209

பேச்சுக்கள் வழி இலங்கை நாட்டில் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தமது கட்சி முரண்பாடுகளையும் வேற்றுமைகளையும் மறந்து செயற்படவேண்டுமெனத் தமிழ் மக்கள் பெயரால் அன்புடன் வேண்டுகிறோம் என யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். பொங்கல் விழா ஒரு நன்றியின் விழா. நம்மை என்றும் நன்றி கூறிக்கொண்டே இருக்க அழைப்பு விடுக்கும் ஒரு விழா. தமிழ் மக்கள் கொண்டாடும் இந்த நன்றியின் பெருவிழாவை உலககெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் 2023ஆம் ஆண்டில் கொண்டாடும் வேளை இறையாசீர் மிக்க வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம். இலங்கை நாடு 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று இவ்வாண்டு 75 ஆண்டுகள் நிறைவாகின்றன. பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளில் முழு வளர்ச்சி அடையாத நாடாக இலங்கை நாடு இருக்கிறது எனக்கணிப்பிடப்பட்டுள்ளது. மூன்று தசாப்த காலப்போர் நிகழ்ந்து ஏறக்குறைய 13 ஆண்டுகளாயும் இன்னும் நீதியோடு கூடிய நிரந்தர தீர்வு ஏற்படவில்லை என்பது வேதனையானது. அண்மைக் காலத்தில் திரும்பவும் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சு வார்த்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சம்பந்தப்பட்ட தமிழ்த் தலைமைகளுக்கும் இடையில் ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. இப்போது ஆரம்பிக்கப்பபட்ட இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்த்தரப்புக்கள் மிக கவனமாகவும் அவதானமாகவும் இருக்கும் வகையிலும் சிங்களத் தலைமைகள் ஓரளவு நேர்மையாக இருக்கும் எனப் பரவலாக எண்ணப்படுகின்ற வகையிலும் நல்லது நடக்கும் என நம்புவோம். இந்த பேச்சுக்கள் வழி இலங்கை நாட்டில் நிரந்தர தீர்வையும் ஏற்படுத்த தமிழ் கட்சிகள் அனைத்தும் தமது கட்சி முரண்பாடுகளையும் வேற்றுமைகளையும் மறந்து செயற்பட வேண்டுமெனத் தமிழ் மக்கள் பெயரால் அன்புடன் வேண்டுகிறோம் என ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.