துணைத் தூதரகத்தில் அத்துமீறல்; இந்தியத் தூதுவருக்கு பங்களாதேஷ் அரசு அழைப்பாணை

0
19

இந்தியாவின் திரிபுராவின் அகர்தலாவில் உள்ள பங்களாதேஷ் துணைத் தூதரகத்தில் இடம்பெற்ற அத்துமீறல் தொடர்பில் உரிய விளக்கமளிக்க இந்தியத் தூதருக்கு பங்களாதேஷ் அரசு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதையடுத்து, பங்களாதேஷூக்கான இந்தியத் தூதர் பிரனாய் வெர்மா, பங்களாதேஷின் வெளிவிவகாரச் செயலாளர் ரியாஸ் ஹமிதுல்லாவை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட பிரனாய் வெர்மா, “இந்தியா – பங்களாதேஷ் இடையே பரந்த பன்முக உறவு உள்ளது. அதனை ஒரே ஒரு விடயமாக சுருக்க முடியாது. மின் விநியோகம், அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி என இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விடயங்களில் முன்னேற்றங்கள் உள்ளன.

நாங்கள் உண்மையில் நேர்மறையான, நிலையான, ஆக்கபூர்வமான உறவை முன்னோக்கி நகர்த்த விரும்புகிறோம். அதற்காக நாங்கள் பல்வேறு விடயங்களை செய்து கொண்டிருக்கிறோம். இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. இதன் மூலம் பரஸ்பர நன்மைகளை உருவாக்க விரும்புகிறோம். மேலும், நமது ஒத்துழைப்பு நம் இருவருக்கும் நன்மை பயக்கும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

கடந்த சில மாதங்களில், அது வர்த்தகமாக இருந்தாலும், மின்சாரம் பரிமாற்றமாக இருந்தாலும், அத்தியாவசிய பொருட்களின் விநியோகமாக இருந்தாலும், நாங்கள் நேர்மறையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

நாங்கள் பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்துடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளோம். மேலும், அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் நமது பகிரப்பட்ட விருப்பங்களை அடைய இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளோம்”- என்றார்.