அரசியல் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சக்இயோல் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த விசாரணையாளர்கள் அவரை கைதுசெய்தனர். ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் பாதுகாப்பு பிரிவினருடன் ஒருமணிநேரத்திற்கு மேல் நீடித்த பதற்றமான நிலையை தொடர்ந்து விசாரணையாளர்கள் ஜனாதிபதியை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ஊழல் விசாரணை அலுவலகத்தில் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். ஏணிகளை பயன்படுத்தி சில விசாரணையாளர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர்களை ஆளும்கட்சியின் உறுப்பினர்களும் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரும் தடுத்து நிறுத்தினார்கள்ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் தடைகளையும் ஏற்படுத்தியுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.எனினும் சில விசாரணையாளர்கள் வேறு சில பகுதிகள் ஊடாக ஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.
அரசியல் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சக் இயோலிற்கு எதிரான பிடியாணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மார்ஷல் சட்டத்தை பிறப்பித்தமைக்கான காரணம் குறித்து விசாரணை செய்வதற்கு யூன் சக் இயோலை கைதுசெய்யவேண்டும் என உயரதிகாரிகளிற்கான ஊழல் விசாரணை அலுவலகம் விடுத்த வேண்டுகோளை சியோல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசியல் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் இதனை சட்டவிரோதமான நடவடிக்கை செல்லுபடியற்றது என குறிப்பிட்டுள்ளனர்.
அதிகார துஸ்பிரயோகம் கிளர்ச்சியை தூண்டியமை தொடர்பில் ஜனாதிபதியை விசாரணை செய்வதற்காக அதிகாரிகள் பிடியாணையை கோரியுள்ளனர்.தென்கொரிய ஜனாதிபதியை கைதுசெய்வதற்காக கடந்தமாதம் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.