தோல்வியின் 48 ஆண்டுகள்

0
53

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் 48ஆவது நினைவு தினம், வழமைபோல், அவரது கட்சியின் தொண்டர்களால் ஆங்காங்கே நினைவு கூரப்பட்டிருக்கின்றது. தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் பலர், செல்வநாயகம் என்று ஒருவர் இருந்திருக்கின்றார், அவர்தான் தமிழ் அரசுக் கட்சியை ஸ்தாபித்தவர் என்பதை அறிவதற்கு இந்த நினைவு கூர்தல்கள், ஒரு வேளை பயன்பட்டிருக்கலாம்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மூலம் அரசியல் வாழ்வை ஆரம்பித்த செல்வநாயகம், பின்னர்,
ஜி.ஜி.பொன்னம்பலம் தவறான பாதையில் செல்கின்றார் – என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில் வெளியேறி, இலங்கை தமிழ் அரசுக் கட்சியை உருவாக்கினார். 1970களுக்கு பின்னர், அரசியல் நிலைமைகள் பெரியளவில் மாற்றமடைந்து சென்றது – இந்த நிலையில், புதிய சூழலுக்கு ஈடுகொடுப்பதற்கு தமிழ் அரசுக் கட்சி பொருத்தமற்றது என்பதை உணர்ந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியை ஸ்தாபித்தார்.

சமஷ்டியை அடையும் இலக்குடன் தமிழ் அரசுக் கட்சியை உருவாக்கிய செல்வநாயகம், சமஷ்டியை தன்னால் அடைய முடியாது என்பதை உணர்ந்த போது, தனிநாட்டு கோரிக்கையை தூண்டினார். இது மிகவும் முரண்பாடான அரசியல். ஏனெனில், சமஷ்டியை அடையும் இலக்கில் தமிழ் அரசுக் கட்சியை ஸ்தாபித்தார், அந்த முயற்சி வெற்றிபெறாத போது, தனிநாட்டை அடைவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்தார். ஆனால், அடையும் வழி தெரியாமலேயே கட்சியை உருவாக்கி, தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து பார்த்து, இறுதியில் தனது சீடர்களுக்கு தோல்வியை ஒப்படைத்துவிட்டு காலமானார்.

சக்கரநாற்காலியில் இருக்கும் செல்வநாயகம் தனிநாட்டை எவ்வாறு பெற்றுத் தருவார் என்று அன்றிருந்த தலைமுறை சிந்திக்கவில்லை. அவரது வழியில் வந்தவர்களோ இறுதியில் சமஷ்டியையும் கைவிட்டு, தனிநாட்டையும் கைவிட்டு, மாவட்ட சபையின் மூலமான அரசியல் தீர்வை நோக்கிச் சென்றதே வரலாறு. செல்வநாயகம் விட்டுச் சென்ற தோல்வி வரலாற்றை மிகவும் பத்திரமாக பாதுகாக்கும் கைங்கரியத்தையே அவரது வழித்தோன்றல்கள் என்போர் இன்றும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

செல்வ நாயகத்தின் இரண்டு கட்சிகளாலும் தமிழ் மக்கள் எதைப் பெற்றுக் கொண்டார்கள் என்று இன்றுள்ள இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கேட்டால், கூறுவதற்கு அந்தக் கட்சியிடம் பதில் இல்லை. செல்வ நாயகத்தினால் விதைக்கப்பட்ட மிதவாத அரசியலின் தோல்விதான், பின்னர் இளைஞர்களின் ஆயுதப் பேராட்டப் பாதையாக மாற்றம் பெற்றது. மிதவாதத்தின் தோல்விதான் ஆயுத விருப்பாகும். ஆயுதப் பாதையில் சென்றவர்களின் சரி பிழைகளுக்கு அப்பால், அவர்களிடம் கூறுவதற்கு ஒரு வழியிருந்தது – அதாவது, ஆயுத பலம் கொண்டு இலக்கை அடைவது. அதிகாரம் என்பது துப்பாக்கிக் குழலிலிருந்து பிறக்கின்றது என்பதுதான் அன்றைய ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் தாரக மந்திரமாக இருந்தது.

எனினும் இந்தியாவின் ஆதரவின்றி அது ஒரு போதும், முடியாது என்பதை பலரும் அறிந்து, புரிந்து வெளியேறிய போது, விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும் அந்தப் பாதையில் நம்பிக்கையுடன் பயணித்தது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழர்களின் ஆற்றல், வளம் அனைத்தும் உச்சமாகப் பயன்படுத்தி, பனைமரமாக உயர்ந்து, இறுதியில் முறிந்து போய், உக்கி கரைந்தனர். இன்றைய சூழலில் செல்வநாயகத்தின் வழிகாட்டல் என்று கூறுவதற்கு என்ன இருக்கின்றது? அவரைப் பின்தொடர்வதாகக் கூறிக் கொள்வோர், அவரால் அடைய முடியாமல் போனதை எவ்வாறு அடையப் போகின்றனர்? செல்வநாயகத்தை நினைவு கொள்வதை ஓர் அரசியல் செயல்பாடாகக் காண்பிக்க முற்படுபவர்களின் பதில் என்ன? ஆகக் குறைந்தது தமிழ் அரசுக் கட்சி ஒரு கட்சிக் கட்டமைப்புடன் கூட இல்லை. செல்வநாயகத்தை நினைத்தல் என்பது உண்மையில் தோல்வியை நினைத்தல்தான்.