நரேந்திரமோடி பதவியேற்றவேளை எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்

0
72

இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக பிரதமர் நரேந்திரமோடி இன்று பதவியேற்றவேளை எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் சாசன புத்தகத்தை உயர்த்தி காட்டி முழக்கமிட்டனர்.

18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். பிரதமர் மோடி முதலில் எம்பியாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். அப்போது “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் அரசியல் சாசனப் புத்தகத்தை கைகளில் உயர்த்திக் காட்டி மோடிக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

 இந்தக் கூட்டத் தொடர் ஜூலை 3-ந் தேதி வரை நடைபெறும். தற்காலிக சபாநாயகர்: லோக்சபாவின் தற்காலிக சபாநாயகராக ஒடிஷா மாநில பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மகதாப் நியமிக்கபட்டுள்ளார். இவர் 7 முறை லோக்சபா எம்பியாக தேர்வானவர். ஆனால் 8 முறை எம்பியான கேரளா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படவில்லை என்கிற சர்ச்சை நீடிக்கிறது. 

தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு: லோக்சபா தொடங்குவதற்கு முன்னராக ஜனாதிபதி மாளிகையில் தற்காலிக சபாநாயகருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து லோக்சபா கூட்டம் முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது.

 முதலில் பிரதமர் மோடி பதவியேற்ற்றார். மோடிக்கு எதிர்ப்பு: பிரதமர் மோடி பதவியேற்ற போது இந்தியா கூட்டணி எம்பிக்கள் அனைவரும் கைகளில் அரசியல் சாசனப் புத்தகத்தை உயர்த்திக் காட்டி மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். முதல் நாளான இன்று மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 280 எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். தமிழ்நாட்டின் 39 எம்பிக்கள் உள்ளிட்டோர் நாளை பதவியேற்பர்.