இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) பூச்சியியல் திணைக்களத்தினால் இலங்கையில் இரண்டு புதிய நுளம்பு இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குலெக்ஸ் சின்டெலஸ் (Culex sintellus ) மற்றும் குலெக்ஸ் நியாயின்ஃபுலா (Culex niyainfula ) ஆகிய இரு நுளம்பு இனங்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்தார்.
பொதுவாக தாய்லாந்து மற்றும் இந்தியாவில் காணப்படும் குலெக்ஸ் சின்டெலஸ் (Culex sintellus ), இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நுளம்பு இனம் உலகம் முழுவதிலும் எந்தவொரு நோயையும் பரப்பும் காரணியாக இதுவரை அறியப்படவில்லையென திஸாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, இந்தியாவில் பரவலாகக் காணப்படும் குலெக்ஸ் நியாயின்ஃபுலா ( Culex niyainfula ) என்ற நுளம்பு, பெருமூளை மலேரியா எனப்படும் நோயின் காவியாக அறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த 2 புதிய நுளம்பு இனங்களும் இலங்கையின் பல்லுயிரியலில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் பரவல் குறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் கண்டறியப்பட்ட மேலும் 4 நுளம்பு இனங்களின் மாதிரிகள் அடையாளம் காண கொரிய பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.