
தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் வலைபந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமான நிலையில் தனது பணம் திருடப்பட்டதாக ஜெமெய்க்கா வலைபந்தாட்ட அணித் தலைவி ஜானிலே ஃபவ்லர் முறையிட்டுள்ளார்.
இதன் காரணமாக பாதுகாப்பு குறித்த கவலைகளை ஜெமெய்க்கா அணி உறுப்பினர்கள் எழுப்பினர். இதனை அடுத்து உயர் மட்ட விசாரணைகள் நடைபெற்றுவருவதாக உலகக் கிண்ண வலைபந்தாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேப் டவுனில் 16ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டம் வெள்ளிக்கிழமை (28) ஆரம்பமானது. நடப்பு சாம்பியன் நியூசிலாந்து 76 – 27 என்ற கோல்கள் கணக்கில் ட்ரினிடாட் அண்ட் டுபாகோவையும் அவுஸ்திரேலியா 86 – 30 என்ற கோல்கள் அடிப்படையில் ஸிம்பாப்வெயையும் தத்தமது ஆரம்பப் போட்டிகளில் இலகுவாக வெற்றிகொண்டன.
உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் 60 வருட வரலாற்றில் ஆப்பிரிக்க மண்ணில் இப்போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
பணம் திருடப்பட்டுள்ளதாக ஜெமெய்க்கா அணித் தலைவி ஜானிலே ஃபவ்லர் செய்த திருட்டு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, முறைப்பாடு ஒன்றை செய்யுமாறு அணி முகாமைத்துவத்திடம் உள்ளூர் பொலிஸார் கோரியதாக அறியக்கிடைக்கிறது. ஆனால் அது இன்னும் நடக்கவில்லை.
‘ஜெமெய்க்கா அணியினரிடமிருந்தோ அணித் தலைவியிடமிருந்தோ எவ்வித அறிக்கையும் வெள்ளிக்கிழமைக்குள் வெளியிடப்படவில்லை’ என பிபிசி ஸ்போர்ட் அப்ரிக்காவிடம் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் ஊடக முகாமையாளர் புரூஸ் டேவிட்சன் கூறியுள்ளார்.
‘எனினும் புலனாய்வு சேவையினர் தங்கள் விசாரணைகளைத் தொடர்கின்றனர்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நகர மத்தியில் உள்ள ஹோட்டலில் தாங்கள் தங்கியிருக்கும் அறைகளுக்குள் தனிப்பட்டவர்கள் நுழைய முற்பட்டதாக புதன்கிழமையன்று ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் ஃபவ்லர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதன் பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது.
உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் 16 அணிகள் தங்கியிருக்கும் ஏழு ஹோட்டல்களில் இந்த ஹோட்டலும் ஒன்றாகும். போட்டி நடைபெறும் கேப் டவுன் இன்டர்நெஷனல் கொன்வென்ஷன் சென்டர் அரங்கிலிருந்து நடந்துசெல்லும் தூரத்தில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.
‘இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என்று ஃபவ்லர் பதிவிட்டுள்ளார். ‘இந்த இடம் பாதுகாப்பற்றது. முதலில் என் பணப்பையில் இருந்து பணத்தை திருடிவிட்டார்கள், இப்போது எங்கள் அறைகளுக்குள் மக்கள் நுழைய முயற்சிக்கிறார்கள். இது உண்மை.
சக வீராங்கனை ஷமீரா ஸ்டெர்லிங், போட்டி தொடங்குவதற்கு முன்பே வெளியேறத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
‘நாங்கள் தெருவில் தங்கியிருப்பது போல் தெரிகிறது. ‘நாங்கள் பாதுகாப்பாக இல்லை, நான் வீட்டிற்கு செல்ல தயாராக இருக்கிறேன்’ எனவும் அவர் தெரிவித்தார்.
பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழா வபைந்தாட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜெமெய்க்கா இந்த வருட உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் வெற்றிபெறக்கூய அனுகூலமான அணிகளில் ஒன்றாக கேப் டவுன் சென்றுள்ளது.
சி குழுவில் இடம்பெறம் ஜெமெய்க்கா தனது ஆரம்பப் போட்டியில் இலங்கையை வெள்ளிக்கிழமை எதிர்த்தாடுவதாக இருந்தது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மற்ற இரண்டு போட்டிகளில் பிஜியை 56 – 51 எனற் கோல்கள் அடிப்படையில் டொங்காவும் சிங்கப்பூரை 79 – 37 என்ற கோல்கள் அடிப்படையில் உகண்டாவும் வெற்றிகொண்டன.