60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒரு வருட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிக்கமர்த்துவதற்கு பொதுச் சேவைகள் ஆணைக்குழு அனுமதி வழங்காததால் நீண்ட தூர சேவைகள், எரிபொருள் போக்குவரத்து மற்றும் சரக்கு தொடருந்து சேவைகள் உட்பட பல தொடரருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு அளிக்கும் அரசின் கொள்கைக்கமைய பல தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்திருந்தது.
எனினும், குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாததால், கடந்த சில தினங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 20க்கும் அதிகமான தொடருந்து சாரதிகள் தமது சேவையை நிறைவுசெய்துள்ளதாகவும் இந்நிலையில், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, அநுராதபுரம் மற்றும் பதுளை உள்ளிட்ட பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படும் தொடருந்து சேவைகள் சில தடைப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.