பொதுமன்னிப்பு இராணுவத்தினருக்கும் பொருந்தக்கூடியது

0
165

இன்றளவிலே தமிழ்மக்களுக்கு இனரீதியான பிரச்சினைகள் எவையும் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் தமிழ்மக்களுக்கு நியாயமான பிரச்சினைகள் எவையேனும் இருப்பின், அவற்றுக்கு உரியவாறான தீர்வு வழங்கப்படவேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதேபோன்று தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சாத்தியமற்றதொன்றாகும். எனவே அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபை முறைமையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இப்போது சிறந்த தீர்வாக அமையும். அடுத்ததாக பொதுமன்னிப்பு என்ற விடயம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மாத்திரமன்றி, அது இராணுவத்தினருக்கும் பொருந்தக்கூடியதாக அமையவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளைச்செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்..எம்.டி.நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னான்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச்செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி, பல்வேறு விடயங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார். நான் இடதுசாரி சிந்தனைகளுடனும் மனிதநேய எண்ணங்களுடனும் இலங்கையன் என்ற அடையாளத்துடனுமே வளர்க்கப்பட்டேன். இருப்பினும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் ஆட்சிபீடமேறிய அரசுகளின் செயற்பாடுகளினால் நாம் எமது உரிமைகளைக்கோரிப் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். இருப்பினும் 1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, அப்போது இந்தியாவிலிருந்த நான் தேசிய நல்லிணக்கம் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம் ஆகியவற்றின் ஊடாகவே தேசிய நீரோட்டத்தில் இணையமுடியும் என்ற நம்பிக்கையில் மீண்டும் நாடு திரும்பினேன். ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் ஏனைய தமிழ்க்கட்சிகளும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே நான் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததன் விளைவாக என்மீது சேறுபூசுகின்ற, என்னைப்பற்றி அவதூறு பரப்புகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பலமுறை என்னைக் கொல்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இப்போது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுகின்றனர். ‘அழுதாலும் பிள்ளை அவளே பெறவேண்டும்’ என்பதைப்போன்று எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ளவேண்டும். மாறாக அதற்குத் தீர்வுகாண்பதற்கான மருத்துவிச்சியாக பிரதமர் மோடியை அழைக்கமுடியாது. இது இவ்வாறிருக்க நான் ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருக்கின்றேன். ஆனால் அந்த ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளத்தக்க சிறந்த பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும் கூட, எனது விடயத்தில் ஏதேனும் உள்நோக்கத்துடன் பக்கச்சார்பாக நடந்துகொண்டிருப்பதாகவே கருதுகின்றேன். அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சில தமிழ்க்கட்சிகள் அரசியல் நோக்கங்களுக்காக தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொண்டன. எனவே இதுவரையில் இயங்கிய ஆணைக்குழுக்களில் பெரும்பாலானவை அதனை ஒரு ‘வேலையாகக்’ கருதிச்செயற்பட்டனவே தவிர, அவற்றின் முன்னிலையில் வழங்கப்படும் வாக்குமூலங்கள் தொடர்பில் ஆராய்ந்து, உண்மையைக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதே எனது நிலைப்பாடாக இருக்கின்றது. அதேபோன்று பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவேண்டும் என்பதே எமது கட்சியின் கொள்கையாகும். ஆனால் சக தமிழ்க்கட்சிகள் பிரச்சினைகள் தொடர்பில் பேசிப்பேசி அவற்றை மேலும் பூதாகரமாக்குவதையே கொள்கையாக வைத்திருக்கின்றன. எனது இளைய சகோதரன் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டிருக்கின்றார். அதேபோன்று எனக்கு மிகநெருக்கமான மேலும் சிலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். கடற்படையினரை எதிர்த்து உயிரிழந்த முதலாவது பெண் போராளியான சோபா எனது தங்கையாவார். ஆனால் இவ்வாறு பழைய விடயங்களை கிளறுவதில் பயனில்லை. அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்தே சிந்திக்கவேண்டும். இன்றளவிலே தமிழ்மக்களுக்கு இனரீதியான பிரச்சினைகள் எவையும் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் தமிழ்மக்களுக்கு நியாயமான பிரச்சினைகள் எவையேனும் இருப்பின், அவற்றுக்கு உரியவாறான தீர்வு வழங்கப்படவேண்டும். அதேபோன்று தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சாத்தியமற்றதொன்றாகும். எனவே அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபை முறைமையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இப்போது சிறந்த தீர்வாக அமையும். அடுத்ததாக பொதுமன்னிப்பு என்ற விடயம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மாத்திரமன்றி, அது இராணுவத்தினருக்கும் பொருந்தக்கூடியதாக அமையவேண்டும். போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருதலைப் பொறுத்தமட்டில், அனைத்துத்தரப்பினருக்கும் பொதுவான தினத்தையும் இடத்தையும் தெரிவுசெய்து வழங்கமுடியும். காணாமல்போனோரின் உறவுகளுக்குரிய இழப்பீடு, வாழ்வாதாரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொடுப்பதுடன் இறப்புச்சான்றிதழைக் கோருவோருக்கு அதனை வழங்கமுடியும். இறுதியாக இவ்வாறானதொரு சம்பவம் மீளநிகழாதிருப்பதை இருதரப்பும் பொறுப்பேற்று உறுதிப்படுத்தவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.