மத்திய மாகாணத்திலும் கால்நடைகளுக்கு தோல் நோய் பரவல்!

0
139

வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் நோய், மத்திய மாகாணத்தில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் பரவியுள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கால்நடைகளை கொண்டுசெல்வது நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் இந்த கால்நடை நோய் பதிவாகியுள்ளது என மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.எம்.கே.பீ.ராஜநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை மற்றும் கலேவெல கால்நடை வைத்திய அதிகாரி பிரிவு, நுவரெலியா மாவட்டத்தில் ராகலை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவு, ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய உடுநுவர குவாட்டல்வ ஆகிய பிரதேசங்களில் கால்நடைகளுக்கு தோல் நோய் பரவி வருகின்றமை இனங்காணப்பட்டுள்ளது என பிரதேச கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு வைரஸ் நோய் என்பதால், நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உடனடி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நோய் பதிவாகியுள்ள பிரிவுகளிலிருந்து கால்நடைகளை வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.