மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்!

0
14

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது.

மன்னார் தெற்கு கடற்பரப்பில், இழுவைப் படகு ஒன்றில் மீன் மிடித்துக் கொண்டிந்த 10 இந்திய மீனவர்கள், இன்று அதிகாலை, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள், தாழ்வுபாடு கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர், மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள், விசாரணைகளின் பின்னர், இன்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான், இந்திய மீனவர்களை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.