மலையகத்தின் பல பிரதேசங்களிலும், மினி சூறாவளி : அனர்த்தங்களில் சிக்கி, இருவர் உயிரிழப்பு

0
131

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி சூறாவளியினால், ஆங்காங்கே பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அனர்த்தங்களில் சிக்கி, இருவர் உயிரிழந்துள்ளனர். பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ள நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. கடும் காற்றினால், நுவரெலியா மாவட்டம், வலப்பனை, உடப்புஸலாவை, ருப்பஹா, கந்தப்பளை ஆகிய பல இடங்களில், பாரிய மரங்கள் முறிந்த நிலையில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்தில், நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசுகின்ற அதேவேளை, கடும் குளிரும் ஏற்பட்டுள்ளது.
வலப்பனை பிரதேசத்தில், ருப்பஹா, மடுல்ல, உடப்புஸலாவை, கல்கடப்பத்தனை, தெரிப்பே, ஹரஸ்பெத்த, இராகலை, புரூக்சைட், கந்தப்பளை ஆகிய பிரதேசங்களில் வீசும் கடும் காற்றினால், வீதியோரங்களில் பாரிய மரங்கள் சரிந்துள்ளதுடன், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இராகலை புரூக்சைட் பகுதியில், வீதியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது, மரம் வீழ்ந்து விபத்திற்குள்ளான நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, இரத்த வெள்ளத்துடன் உயிரிழந்துள்ளதாக, இராகலை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி சாரதி உட்பட மூவர், பலத்த காயங்களுடன், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உடப்புஸ்ஸல்லாவ கல்கட பத்தனையில், வீடு மீது பாரிய மரக்கிளை வீழ்ந்ததினால், இன்று அதிகாலை, ஒருவர் உயிரிழந்துள்ளார். வலப்பனை -நில்தண்டாஹின்ன ரூப்பஹா மற்றும் உடப்புஸலாவை -மடுல்ல பிரதேச பிரதான வீதிகளில், பாரிய மரங்கள் வேருடன் சரிந்த நிலையில், மின் கம்பங்கள் முறிந்துள்ளன. அதனால், வீதி போக்குவரத்தை சீர்செய்ய, அங்கு மரங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால், இப்பிரதேசத்திற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், வலப்பனை பிரதேசத்திற்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது. உடப்புஸ்ஸல்லாவ- மெத்திவரன நிவாச பகுதியில், வீடொன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் மீது, மரம் ஒன்று முறிந்து வீழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வலப்பனை பிரதேசத்தில் வீசும் பலத்த காற்றினால், அனர்த்தங்கள் பல பதிவாகின்றன.
பாரிய மரங்கள் காணப்படும் இடங்களில் வசிப்போரை, அவதானத்துடன் இருக்குமாறு, நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் ரஞ்சித் அழககோன், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், கந்தப்பளை -இராகலை வீதியில் கொங்கோடியா பகுதியில், பிரதான வீதியில் முறிந்து வீழ்ந்த மரத்தை அகற்றும் பணி, விரைவாக முன்னெடுக்கப்பட்டது.
இராகலை உயர் நிலை பாடசாலையின் கட்டடம் ஒன்றின் மீது, பாரிய மரம் வீழ்ந்து, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டடத்தில் பயிலும் உயர் தர மாணவர்கள், பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், மாணவர்களுக்கு பாதிப்பில்லை என, பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.