யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையில் தரம் 9 மாணவர்களுக்கான மாலைநேர கல்வி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் அமெரிக்கன் மிசன் திருச்சபை வளாகத்தில் பிரித்தானியா கனகம்மா அறக்கட்டளை நிதி அனுசரணையில் தரம் 9 மாணவர்களுக்கான விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை கொண்ட மாலைநேர கல்வி நிலையம் ஒன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மருதங்கேணி கிளை தலைவரும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்ட பணிப்பாளர் சபை உறுப்பினருமான சங்கரப்பிள்ளை திரவியராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கருத்துரைகள் இடம்பெற்றன. தொடர்ந்து சம்பிரதாய பூர்வமாக மாலை நேர கல்வித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமெரிக்கன் சிலோன் திருச்சபை குடத்தனை வளாகத்தினுடைய போதகர் கமல், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்ப்பாண கிளை தலைவர் கே.பாலகிருஷ்ணன், இலங்கை செஞ்சிலுவைச் சங்க பருத்தித்துறை கிளை தலைவர் சதானந்தன், கரவெட்டி இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவர் சி.ரகுவரன், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட பிரதிநிதிகள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்