ஈழத் தமிழ் மன்னனான விஷ்ணுபுத்திர வெடியரசன் காலத்தில் அமைக்கப்பட்டு தமிழர் தம் பண்பாட்டு, மரபியல் அடையாளமாகப் பேணப்பட்டு வரும்
விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்காக தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் முனைப்புகளை தடுத்து நிறுத்துமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
தொல்பொருள் என்ற போர்வையில் வடக்கு, கிழக்கில் நடைபெறும் பல்வேறு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி சிவஞானம் சிறிதரன் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
‘கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவின் மாவிலி இறங்குதுறையிலும், கோட்டைப் பகுதியிலும் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிங்களம் மற்றும் ஆங்கில மொழியிலான விளம்பரப் பலகைகளில் தற்போதுள்ள கோட்டையின் பாகங்கள் பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்கள் எனக் குறித்துரைக்கப்பட்டுள்ளதன் மூலம் மிகப்பாரதூரமான வரலாற்றுத் திரிபுக்கான முன்னகர்வுகள் தொல்லியல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் என்ற போர்வையில் தமிழரின் வரலாற்றிடங்களை சிங்கள பௌத்த அடையாளங்களாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், நெடுந்தீவு விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை தொடர்ந்தும் தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக பேணிப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு, மக்களின் கோரிக்கையாக இதனை தங்களுக்கு முன்னளிப்புச் செய்கிறேன்’ என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.