கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் மடிக்கணினி ஒன்றை கொடுத்துச் சென்றதாக கூறப்படும் வெளிநாட்டு பெண் ஒருவர் சீனாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுடைய ஜெர்மன் பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வெளிநாட்டு பெண் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு சென்றுள்ள நிலையில் அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் மடிக்கணினி ஒன்றை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றிருந்தார்.
இந்த வெளிநாட்டு பெண் சென்ற சிறிது நேரத்தில் ரஷ்ய தூதரகத்திற்குள் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான வெளிநாட்டு பெண் சீனாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டு பெண் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பிணையில் விடுதலை செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்ணை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.