‘ஜோ’ படத்தின் மூலம் இளைய தலைமுறை ரசிகர்களிடம் ஆதரவையும், வரவேற்பையும் பெற்றிருக்கும் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளார்கள்.
அறிமுக இயக்குநர் ‘பிளாக் ஷீப்’ கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ரியோ ராஜ் , மாளவிகா மனோஜ், ‘பிளாக் ஷீப் ‘ஆர் ஜே விக்னேஷ், ஷீலா ராஜ்குமார், இயக்குநர் ஏ. வெங்கடேஷ், ஜென்சன் திவாகர், பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். ஜனரஞ்சகமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” திருமணம் செய்து கொண்ட பிறகு ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றியும், சவால்களை பற்றியும் பெண்மணிகளும் ஏற்றுக் கொள்ளும்படி நகைச்சுவையுடன் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முழுமையாக நிறைவடைந்துள்ளது. விரைவில் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்குகிறது. தொழில்நுட்ப பணிகள் நிறைவடையும் தருவாயில் படத்தின் டைட்டில்- ஃபர்ஸ்ட் லுக் -டீசர் – பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் ” என்றார்.
இதனிடையே ‘ஜோ’ எனும் திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே ஜோடி இணைந்திருப்பதால்… இந்த திரைப்படத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.