31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடக்கு சுகாதார பிரிவினரோடு கலந்தாலோசிக்காது புதிய கட்டிட திறப்பு விழா ஏற்பாடுகள்..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஜெய்க்கா செயற்றிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட விவசாய ஆய்வுகள் மற்றும் பயிற்சிக்கான ஆய்வுமையக் கட்டடத் தொகுதி எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை திறப்பு விழா காண இருக்கிறது.

கடந்த வருடம் இதன் கட்டட  மற்றும் அமைப்பு வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டிருந்த போதிலும், திறப்பு விழா ஒழுங்கமைப்பில் காணப்பட்ட இழுபறி நிலையினால் மிக நீண்ட காலமாகப் பாவனைக்கு விடப்படாமல் இருந்து வந்தது.

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட  செயல் திட்டத்தின் கீழ் 1.6 பில்லியன் ஜப்பானிய ஜென் ( இலங்கை ரூபாயில் 2.2 பில்லியன்) பெறுமதிக்கு கட்டடங்கள் மற்றும் ஆய்வு கூட உபகரணங்கள் மற்றும் நவீன விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன. கட்டுமானப் பணிகள்  கடந்த வருடம் நிறைவு பெற்ற பின்னரும், பாவனைக்கு விடாதமை குறித்துக் கவலையடைந்த ஜப்பானிய அரசாங்கம், அதனை விரைவில் திறந்து பாவனைக்கு விடுமாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அழுத்தம் கொடுத்ததையடுத்து, இந்தக் கட்டடத் தொகுதியை எதிர்வரும் 31 ஆம் திகதி திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவுக்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தனிகர் அகிரா சுகியமா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ள நிலையில்,
     குறித்த நிகழ்வு வடக்கு மாகாண சுகாதார பிரிவினரோடோ அல்லது சுகாதார திணைக்களத்தினருடனோ கலந்தாலோசிக்காது மத்திய கல்வி அமைச்சினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் தற்போது நாட்டில் கொரோணா தாக்கம் நாடு பூராகவும் வலுவடைந்து வரும் நிலையில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தொற்று தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது. கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் குறித்த நிகழ்விற்கு சுகாதார திணைக்களத்தின் அனுமதி பெறப்படாமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரணமாக பொதுமக்கள் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பல்வேறுபட்ட சுற்றறிக்கைகள் சுகாதார திணைக்களத்தினரால் வெளியிடப்படுகின்றபோதிலும் மத்திய கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் கட்டிடத் திறப்பு விழாதொடர்பில் சுகாதார திணைக்களத்தினரோடு கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக கல்வி அமைச்சினால் மேற்படி கட்டிடத் திறப்பு தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது சமூக ஆர்வலர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எனினும் இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினரோடு தொடர்பு கொண்டபோது, நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக சில வேளைகளில் அந்த நிகழ்வு நிறுத்தப்படகூடும் எனினும் இந்த நிகழ்வுக்கான முழு ஏற்பாடுகளையும் மத்திய கல்வி அமைச்சினாலேயேமேற்கொள்ளப்படுகின்றது எனினும் இது தொடர்பில் உயர் அதிகாரிகளுடன்  கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles