வட்ஸ் அப் பயனர்களுக்கு எச்சரிக்கை!

0
105

உலகளவில் பெரும்பாலானோர் பயன்படுத்தக்கூடிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வட்ஸ் அப் உள்ளது. உலகம் முழுவதும் 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் வட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். குறுஞ்செய்தி அனுப்புவது மட்டுமல்லாது, புகைப்படங்கள், காணொளிகள், கோப்புக்கள் என பல வசதிகளை வட்ஸ் அப் தனது பயனர்களுக்கு அளித்துவருகிறது. இதனால், வட்ஸ் அப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே நேரத்தில் வட்ஸ் அப்பில் பயனர்களின் தரவுகள் குறித்த பாதுகாப்பின்மை அச்சமும் நிலவி வருகிறது. இந்த நிலையில் உலகில் மிகப்பெரிய ஹெக்கர்களின் தகவல் திருட்டில், கிட்டத்தட்ட 50 கோடி வட்ஸ் அப் பயனர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டு ஒன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. சைபர் நியூஸ் அறிக்கையின்படி ஒரு ஹெக்கர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், 2022 தரவுகளின் அடிப்படையிலான சுமார் 48.7 கோடி வட்ஸ்அப் பயனர் மொபைல் எண்கள் விற்பனைக்கு தயாராகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா மற்றும் இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த வட்ஸ்அப் பயனர்களின் செல்போன் எண்கள் உள்ளன. அதில் 32 அமெரிக்க மில்லியன் மக்களின் தரவுத்தொகுப்பை 7,000 டொலருக்கு விற்பனை செய்வதாக அந்த ஹெக்கர் தெரிவித்துள்ளார். தற்போது வரை சைபர் நியூஸ் அறிக்கைக்கு மெட்டா நிறுவனம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.