விசாரணைக்கு வந்த ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான முறைப்பாட்டு மனு

0
18

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டு மனு இன்று (16) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

முதலில் உயர் நீதிமன்றப் பதிவாளர் அரவிந்த குணரத்னவிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இதன்போது மனுவொன்றை சமர்ப்பித்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் வழிகாட்டுதலின் கீழ் சாட்சியமளித்த உயர் நீதிமன்றப் பதிவாளர், மின்னணு விசா வழங்கும் முறையை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மூன்று அடிப்படை உரிமைகள் மனுக்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இந்த இடைக்காலத் தடை உத்தரவுகள் கடந்த ஆண்டு ஓகஸ்ட் 2ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் பிரதிவாதியான குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் உத்தரவுகளை செயல்படுத்துவது கடினம் என்று நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளின் சாட்சியங்களை பதிவு செய்ததன் பின்னர், பிரதிவாதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். பின்னர், மின் விசா வழங்கும் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த இலங்கை மொபிடெல் நிறுவனத்தின் சாட்சியாளரிடமிருந்தும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. 

அதன் பின்னர், பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இந்த வழக்குக்கு அடிப்படையாக உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பல கோப்புகளை பெற்றுக்கொள்ள உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தொடர்புடைய கோப்புகளை சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றப் பதிவாளரிடம் சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டனர். பின்னர், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஜூலை 1ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

முந்தைய அரசாங்கத்தின் போது இலத்திரனியல் விசா (e-Visa) வழங்கும் செயல்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மாற்ற அமைச்சரவை எடுத்த முடிவை செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து, பழைய விசா வழங்கும் முறையை மீண்டும் அமுல்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது. 

இடைக்காலத் தடை உத்தரவை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவை எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அவரது பிணை விண்ணப்பமும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்தப் முறைப்பாடுகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.