ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி

0
128

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு நாளை காணொலி மூலம் இடம்பெறவுள்ளது.

குறித்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருடன் ரஷ்ய ஜனாதிபதி புதினும் பங்கேற்கவுள்ளார்.

2017 ஆம் ஆண்டு இதில் உறுப்பினராக சேர்ந்த இந்தியா, இந்த ஆண்டு, மாநாட்டு நிகழ்வை நடத்துகிறது. 

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் பகுதியில் கடந்த ஆண்டு இந்த உச்சிமாநாடு நடந்தது. ஆனால், இந்த முறை, இது ஆன்லைனில் நடத்தப்படும் என்று இந்தியா அறிவித்திருக்கிறது. 

இரு வாரங்களுக்கு முன் ரஷ்யாவில், ஜனாதிபதி புதினுக்கு எதிராக இடம்பெற்ற ஆயுதமேந்திய வாக்னர் கிளர்ச்சியை அவர் வெற்றிகரமாக ஒடுக்கிய பிறகு நடைபெறும் ஒரு சர்வதேச நிகழ்வில் அவர் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தன்னை தனிமைப்படுத்தும் முயற்சியில் மேற்கத்திய நாடுகள் தோற்றுவிட்டதாக காட்டத் துடிக்கும் புதினுக்கு, அனைத்தும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தனது அரசாங்கத்திற்கான சவால்கள் அனைத்தையும் திறம்பட அடக்கி விட்டதாகவும் உலகுக்கு உணர்த்த இந்த மாநாடு முன்னெப்போதையும் விட முக்கியமானது.

இது குறித்து, வில்சன் மையத்தின் தெற்காசிய நிறுவனம் எனப்படும் அமைப்பின் இயக்குனர் மைக்கேல் கூகல்மேன் தெரிவிக்கையில்,

‘இந்த கூட்டம், உலகளவில் புதின் தனது வலிமையையும் நம்பகத்தன்மையையும் முன்வைக்க கிடைத்திருக்கும் சில வாய்ப்புகளில் ஒன்றாகும்’ என தெரிவித்துள்ளார். 

அதே போல் இது இந்தியாவிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க சந்திப்பாக அமையலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். 

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கியது முதல் தற்போது வரை இந்திய-ரஷ்ய உறவு வலுவாக இருந்து வருகிறது. 

ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இந்தியா சாதனை அளவில் சேகரித்து வைத்திருக்கிறது. மேலும், தனது 60% பாதுகாப்பு தளவாடங்களுக்கு ரஷ்யாவையே இந்தியா நம்பியுள்ளது.