தடுத்து நிறுத்த அடக்குமுறையைக் கையாண்டாலும் பொலிகண்டி வரை நிச்சயம் செல்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொட்டும் மழையிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று காலை ஆரம்பமாகியது.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
அனைத்து தமிழ் உறவுகளையும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மீண்டும் அழைப்பு விடுக்கின்றோம்.
இலங்கை அரசாங்கத்தால் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள், வடக்கு – கிழக்கில் தொடரும் நில அபகரிப்புக்கள் என்பனவற்றை கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு அனைத்து விதமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் அகிம்சை முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.