யுக்ரேனில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னதாக எச்சரித்திருந்தார். ஆனால், அமெரிக்காவின் இந்த கூற்றை ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் மறுத்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் மறுப்புக்கு அமெரிக்க பாதுகாப்புத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சிஎன்என் இண்டர்நேஷனல் ஊடகத்திடம் பேசுகையில், ரஷ்யாவின் “இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டால்” அணு ஆயுதங்களை ரஷ்யா யன்படுத்தலாம் என தெரிவித்தார். உலகிலேயே அதிகளவிலான அணு ஆயுதங்கள் கையிருப்பைக் கொண்டுள்ள நாடு ரஷ்யா.
அணு ஆயுதங்கள் குறித்த ரஷ்ய அதிபர் மாளிகையின் கருத்து “ஆபத்தானது” என, அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
“பொறுப்புள்ள அணுசக்தி நாடு இப்படி நடந்துகொள்ளக்கூடாது,” என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள், “எங்களின் போர் தடுப்பு நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு இட்டுச்செல்லும் எதையும் பார்க்கவில்லை” என தெரிவித்தார்.
“இதுகுறித்து எங்களால் முடிந்த அளவுக்கு தினந்தோறும் கண்காணித்து வருகிறோம்,” என அவர் கூறினார்.
அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டாவும், பெஸ்கோவ்வின் கருத்தை விமர்சித்துள்ளார்.
“அணு ஆயுதங்கள் குறித்த ரஷ்யாவின் கருத்து ஆபத்தானது. இதனை வேறுவழியில் எப்படி பார்ப்பது என்பது தெரியவில்லை. குறைவான திறன் கொண்ட அணு ஆயுதங்களை உபயோகிப்பதற்கான சாத்தியமான வழிகளை ரஷ்யா ஆராய்ந்துவருகிறது,” என பனேட்டா சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்தார்.