இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரி பிரதேசத்தில் அதிகபட்சமாக 101 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.அத்துடன், வட்டவளை பிரதேசத்தில் 87.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் இரத்தினபுரி – தெதெனகல பிரதேசத்தில் 82.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
சில மாதங்களுக்குப் பின்னர் மலையகத்தில் நீரேந்தும் பகுதிகளில், பலத்த மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதிகளிலான சாமிமலை, சிவனொலிபாதமலை பாதுகாப்பு பிரதேசம், மற்றும் மஸ்கெலியா ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.எவ்வாறாயினும், நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களை நிரப்புவதற்கு இந்த மழை போதுமானதாக இல்லை என மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.நீர்ப்பாசன திணைக்களத்திற்குட்பட்ட நீர்த்தேக்கங்களில் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு இதுவரையில் போதிய மழைவீழ்ச்சி கிடைக்கவில்லை என அந்த திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சுதர்ஷனி விதான பத்திரன தெரிவித்துள்ளார்.