அமெரிக்காவின் வரி விதிப்பால் உலக வர்த்தகம் 3 சதவீதம் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, பரஸ்பர வரி விதிப்பால் சீனா, மெக்சிக்கோ உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்படும் என்று சர்வதேச வர்த்தக மையத்தின் செயல் இயக்குநரான பமீலா கோக் ஹேமில்டன் தெரிவித்தார்.
முன்னதாக இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரி விதித்துள்ளார். இது சர்வதேச அளவில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பல நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. இதைத்தொடர்ந்து சீனாவைத் தவிர பிற முக்கியமான நாடுகளுக்கு எதிரான வரியை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்தி வைத்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கா மீது 125 சதவீத வரியை அறிவித்தது. ட்ரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தக போருக்கு வித்திட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பமீலா கோக் ஹேமில்டன்,’அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால் வர்த்தக முறைகள் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பில் குறிப்பிடத்தக்க நீண்டகால மாற்றங்களுடன், உலகளாவிய வர்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சரியக்கூடும். இதைப்போல நாடுகளின் ஏற்றுமதியும் இடம் மாறும்.
எடுத்துக்காட்டாக மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மெக்சிக்கோ ஏற்றுமதியை சொல்லலாம். அந்த நாட்டின் ஏற்றுமதியானது அமெரிக்கா, சீனா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற சந்தைகளிலிருந்து கனடா மற்றும் பிரேசிலுக்கும், குறைந்த அளவில் இந்தியாவுக்கும் மாறுகிறது.
இதைப்போல வியட்நாம் ஏற்றுமதிகள் அமெரிக்கா, மெக்சிக்கோ மற்றும் சீனாவிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்க சந்தைகள், ஐரோப்பிய யூனியன், கொரியா உள்ளிட்டவற்றுக்கு மாறுகிறது. ஆடைத்துறை, வளரும் நாடுகளுக்கான பொருளாதார செயல்பாடு மற்றும் வேலைவாய்ப்பில் முக்கிய பங்காற்றுகிறது. இதில் உலகின் 2ஆவது பெரிய ஏற்றுமதியாளராக விளங்கும் பங்களாதேஷ் 37 சதவீத வரியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு 2029 ஆம் ஆண்டுக்குள் 3. 3 பில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 97 ஆயிரம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்படும். பரஸ்பர வரி விதிப்பால் சீனா, மெக்சிக்கோ, தாய்லாந்து மற்றும் தெற்கு ஆபிரிக்க நாடுகள் அதிகம் பாதிக்கப்படும். அதைப்போன்று அமெரிக்காவும் பாதிப்பை எதிர்கொள்ளும்’- என்றார்.