அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வரும் நிலையில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு சென்றுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளதோடு மின்சாரமும் தடைபட்டுள்ளது. விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை பனிப்புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதைத் தாண்டியுள்ளது. பனிப்பொழிவு காரணமாக பலர் வாகனங்களிலேயே சிக்கி உயிரிழந்துள்ள காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இக் கடுமையான பனிப்பொழிவு காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போயுள்ளதோடு சில இடங்களில் மட்டும், நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் கடந்து நீர் பாயும் காட்சிகளும், வீடியோக்களாக வெளியாகியுள்ளன.