அமெரிக்க உதவி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சமந்தா பவர், இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்றார்.
பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இலங்கையின் நிலைமைகளை ஆராயும் நோக்கிலேயே, பவரின் விஜயம் இடம்பெற்றிருக்கின்றது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் பேசியபோது, இந்திய உதவியை பாராட்டியிருந்த பவர், சீனாவை சாடியிருந்தார்.
சீனாவின் கடனானது, வலிந்து ஏற்படுத்தப்பட்ட கடன் மேலாதிக்கமென்றும் வர்ணித்திருந்தார்.
சீனாவின் காலூன்றல் தொடர்பில், அமெரிக்க ஆய்வாளர்கள் தொடர்ந்தும் பேசிவருகின்றனர். அண்மையில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏயின் தலைவர் கூட, இலங்கையின் பிரச்னையை சீனாவின் தலையீட்டின் விளைவுகளில் ஒன்றென்றே குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில்தான், சமந்தாவின் இலங்கை விஜயம் இடம்பெற்றிருக்கின்றது.
சமந்தா பவர், அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் உறுப்பினராவார்.
பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவருடன் நெருக்கமாக பணியாற்றிவர்களில் சமந்தா முக்கியமானவர்.
வெளிவிவகார கொள்கையில் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திவரும் சமந்தா, ஒபாமாவின் காலத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவராகவும் இருந்தவர்.
அமெரிக்காவில் மனித உரிமை விடயத்தில் ஒரு ஜனரஞ்சக நட்சத்திரம் என்று வர்ணிக்கப்படுமளவிற்கு, மனித உரிமை விவகாரங்களில் கடும்தொனி குரலாக தொழிற்பட்டவர்.
இவர் ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவராக இருந்த காலத்தில், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.
இலங்கை தொடர்பான ஒபாமா நிர்வாகத்தின் அணுகுமுறைகளை வடிவமைத்தவர்களில் இவரும் ஒருவர்.
எனினும் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில், கொழும்பை பொறுப்புக் கூறச் செய்யும் அமெரிக்க முயற்சிகள் இதுவரையில் வெற்றியளிக்கவில்லை. ஏனெனில் அமெரிக்கா மென்மையான அணுகுமுறைகளையே கடைப்பிடித்துவருகின்றது.
யுத்தம் நிறைவுற்று பன்னிரெண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் எவையும் நிறைவு செய்யப்படவில்லை.
எனினும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களோ, இப்போதும்
அமெரிக்க தேசிய கொடியை கையிலேந்தியாவாறு தெருக்களில் நின்றுகொண்டிருக்கின்றனர்.
இவற்றுக்கு அப்பால், யுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் மீது, மேற்குலகம், குறிப்பாக அமெரிக்கா பிரத்தியேக கவனத்தையும் செலுத்தவில்லை.
கடந்த பன்னிரெண்டு வருடங்களில் அமெரிக்க உதவி நிறுவனம் பிரத்தியேக திட்டங்களை வடக்கு கிழக்கில் மேற்கொள்ளவில்லை.
திருகோணமலையில் பிராந்திய அலுவலகத்தை கொண்டிருந்த காலத்தில் காண்பித்த ஈடுபாட்டை, யுத்தத்திற்கு பின்னர் காண்பிக்கவில்லை.
நோர்வேயின் சமாதான முன்னெடுப்புக்களை பலவீனப்படுத்தியல் அமெரிக்காவின் அன்றைய பயங்கரவாதம் தொடர்பான வெளிவிவகாரக் கொள்கைக்கும் முக்கிய பங்கிருப்பதாக மேற்குலக ஆய்வாளர்களே சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
அமெரிக்கா இதனை திட்டமிட்டு செய்யாத போதிலும், அமெரிக்காவின் கொள்கையை ராஜபக்ஷக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
சமாதான முன்னெடுப்பில் அனுசரணையாளராக தொழிற்பட்ட நோர்வே, முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் பிரத்தியேக கவனத்தை செலுத்தவில்லை.
இன்று இலங்கைக்கான தூதரகத்தையே மூடவுள்ளதாக அறிவித்திருக்கின்றது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கண்டுகொள்ளாமல் மேற்குலகம் நழுவிவிட்டதா? – வெறுமனே உதட்டளவில்தான் விடயங்கள் நோக்கப்படுகின்றனவா என்னும் கேள்வியெழுக்கின்றது.
சமந்தா பவர், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் உதவுவது தொடர்பிலும் பிரத்தியேக ஈடுபாட்டை காண்பிக்க வேண்டும்.
தமிழ்ப் பகுதியில், பிராந்திய அலுவலகம் ஒன்றை நிறுவ வேண்டும்.
தமிழ் சிவில் சமூக மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களுக்கு புத்துயிரளிக்க வேண்டும்.