அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில், கெஸ்பேவ நகர அபிவிருத்தி திட்டத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு

0
123

உலக நகரங்கள் தின விழாவை முன்னிட்டு, கெஸ்பேவ நகர அபிவிருத்தி திட்டத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வு, நேற்று, அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அந்தவகையில், எதிர்காலத்தில் கெஸ்பேவ நகரம் ‘பசுமை இல்லம்’ ஆக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
கொழும்பு நகரத்தின் அழுத்தமான சூழலில் இருந்து மக்களை பாதுகாத்து, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மீண்டு வரக்கூடிய நகரமாக, கெஸ்பேவ நகரத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபை, கடந்த வருடம் வர்த்தமானி மூலம், 22 நகர திட்டங்களையும், இந்த வருடம், 7 நகர திட்டங்களையும் வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்ட மொத்த நகரத் திட்டங்களின் எண்ணிக்கை 29 ஆகும்.
கொழும்பு, கோட்டை, தெஹிவளை, மஹரகம, ஹோமாகம, நுவரெலியா மற்றும் கந்தளாய் நகர அபிவிருத்தித் திட்டங்களே, இவ்வருடம் அறிவிக்கப்பட்ட, 7 நகர அபிவிருத்தித் திட்டங்களாகும்.
அத்துடன், 42 நகர திட்டங்கள், இந்த ஆண்டு வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
தற்போது நகரமைப்பு திட்டம் தயாரிக்கும் பணி, இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
உள்ளுராட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் கருத்துக்களை பெற்று, இந்த அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம், நகர திட்டமிடலுக்கான யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு, பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், தேசிய மற்றும் மாகாண மட்டங்களில், பொருளாதார, சமூக மற்றும் பௌதீக அபிவிருத்தியை துரிதப்படுத்துவது, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பணியாகும்.
இந்த நிகழ்வில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, கஸ்பேவ மாநகர சபை முதல்வர் லக்ஷ்மன் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.