அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.’சமுர்த்தி சௌபாக்கியா இல்லம் 2022′ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தலா 650,000 ரூபா நிதியொதுக்கீட்டில் இறக்காமம் 5ஆம் பிரிவு மற்றும் வரிப்பத்தான்சேனை 3 ஆம் பிரிவு ஆகிய இரு வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் இதன் போது இடம்பெற்றன.
இறக்காமம் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம். தஸ்லீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் .றஸ்ஸான் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டதுடன் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.செல்வகுமார், சமுர்த்தி வங்கி முகாமையாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா மற்றும் சமூக அபிவிருத்தி உதவியாளர் ஏ.எல்.ஜெமீல் உள்ளிட்ட பிரிவிற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் வீசேட வீடமைப்புத் திட்டத்திற்காக தலா 650,000 ரூபா பெறுமதியில் மூன்று குடும்பங்களும், சாதாரண வீடமைப்புக்காக தலா 250,000 ரூபா பெறுமதியில் மூன்று குடும்பங்களும், வீடு திருத்தம் செய்வதற்காக தலா 125000 ரூபா பெறுமதியில் மூன்று குடும்பங்களுமாக மொத்தம் 9 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆரம்ப வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.