அம்பாறையில் பாடசாலை ஒன்றில் கொள்ளையிட்டவர்கள் கைது

0
255

அம்பாறை மாவட்டத்தில் பாடசாலை ஒன்றில் இருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான மின் உபகரணங்களை கொள்ளையிட்ட மூவர் உட்பட நால்வரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள மலையடி கிராமம் அல் அர்சாத் பாடசாலையில் கடந்த 17 ஆம் திகதி உபகரணங்கள் பல களவாடப்பட்டதாக 18 ஆம் திகதி பாடசாலை அதிபரால் சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய இன்று காலை அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர் நடமாடுவதாக சம்மாந்துறை இரகசிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி கே.சதிஸ்கர் சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜனோசன் தலைமையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜெயகுமார் துரைசிங்கம் குழுவினர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் கொள்ளையர் குழு மூவர் களவாடப்பட்ட பொருளை கொள்வனவு செய்த மற்றுமொருவர் உள்ளடங்கலாக நால்வரை கைது செய்தனர்.

கைதான கொள்ளையர் குழு போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் 23 ,25, 21 வயதினை உடைய இளைஞர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கடந்த கொரோனா அனர்த்தம் ஆரம்பமான காலத்தில் இருந்து இக்குழு இச்சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் களவாடப்பட்ட பொருட்கள் 3 இலட்சத்திற்கும் அதிகளவான பெறுமதியானதாகவும் இதில் நிழற்பிரதி இயந்திரம், கணனி உபகரணங்கள், ஒலிவாங்கிகள், கொரோனா வெப்பநிலை இயந்திரம் உள்ளிட்ட அடங்குவதாகவும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.