புனித ஹஜ் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று நடைபெற்றது. மருதமுனை தாறுல் ஹூதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை ,கல்முனை, சம்மாந்துறை ,நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.

புனித ஹஜ்ஜுப் பெருநாள் விசேட கூட்டுத்தொழுகை மட்டக்களப்பு- ஏறாவூர் பிரதேசத்திலும் நடைபெற்றது.ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இக்கூட்டுத்தொழுகையில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
தௌஹீத் ஜமாஅத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இத்தொழுகையில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களும் கலந்துகொண்டனர். தொழுகையினையடுத்து மார்க்க உபந்நியாசம் நடைபெற்றது. இங்கு கூடியிருந்த முஸ்லிம்கள் தொழுகையின் பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.

காத்தான்குடி கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை
இடம்பெற்றது.காத்தான்குடி கடற்கரையில் இஸ்லாமிக் சென்டர் ஏற்பாட்டில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையையும் பெருநாள் குத்பா பிரசங்கத்தையும் ஹாலிதீன் ஹாபிழ் நடத்தினார்.
காத்தான்குடி ஆற்றங் கரையிலும் பெருநாள் தொழுகை இடம்பெற்றது இங்கு தொழுகையினையும் பெருநாள் குத்பா பிரசங்கத்தையும்; சிராஜ் மௌலவி நடத்தினார்.

புனித ஹஜ் பெருநாள் கூட்டுத்தொழுகை இன்று மட்டக்களப்பு ஜாமி உஸ் ஸலாம் ஜும் ஆ பள்ளிவாசலிலும் நடைபெற்றது. விசேட தொழுகையும் , துவா பிரத்தினைகளும் மௌலவி பேசிமாம் ருஸ் சைத்து ரகுமான் பலாகி தலைமையில் இடம்பெற்றது .
விசேட பெருநாள் தொழுகை பிராத்தனையில் மட்டக்களப்பு நகர் அனைத்து இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர். தொழுகையின் பின் அனைவரும் தமது புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
