இந்து சமய கலாசார திணைக்களத்தின் அனுசரணையுடன், அம்பாறை அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற,
சுவாமி விபுலானந்தரின் துறவற நூற்றாண்டு விழாவும் பாடசாலை மாணவர்களுக்கான பஞ்சபுராண சுடர் விருது வழங்கும் நிகழ்வும் இன்று
சிறப்பாக நடைபெற்றது.
இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் த.கயிலாயபிள்ளையின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.ஜெகராஜன் கலந்துகொண்டார். சுவாமி விபுலானந்தரின் திருவுருவப்படத்தை தாங்கிய பவனி அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையின் முன்பாக இருந்து ஆரம்பமாகி இந்து இளைஞர் மன்ற மண்டபத்தை வந்தடைந்தது.
சுவாமி விபுலானந்தரின் திருவுருவப்படம் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டு சுவாமியின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடாத்தப்பட்டன.
பஞ்சபுராணத்தை பண்ணுடன் ஓதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பஞ்சபுராண சுடர் விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட மாணவர்கள்
அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் விபுலானந்தரின் சிறப்பு பற்றி மாணவர்கள் உள்ளிட்டவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டதுடன் பஞ்ச புராண போட்டியினை மாணவர்களிடையே அறிமுகப்படுத்திய அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தை அனைவரும் பாராட்டி பேசினர். ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் கீ.கமலமோகனதாசன் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.