அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக செயற்பாடுகளை முடக்கும் முயற்சி, பொதுமக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது

0
173

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என கடந்த 35 வருடங்களாக இங்குள்ள தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ் விடயம் தொடர்பான நீதிமன்ற வழக்கு ஒன்றும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில்,
இங்குள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளால் திரைமறைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.
இன்று காலை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேயவிக்கிரம மேற்கொண்டார் .
பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் அபேயவிக்கிரம, கல்முனை வடக்கு பிரதேச செயலாளரை கல்முனை பிரதேச செயலகத்திற்கு அழைத்துச் சென்று
அவரை உப பிரதேச செயலாளராகவும், பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலகமாகவும் மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்கின்றார் என்ற தகவல் பிரதேச தமிழ் மக்கள் மத்தியில்
பரவியதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர்.
இவ்வாறு முற்றுகையிட்ட மக்கள் இப் பிரதேச செயலகத்திற்கு உடனடியாக கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறும், பிரதேச செயலகத்திற்குரிய காணி அதிகாரங்கள் உள்ளிட்ட
ஏனைய அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபரை சுற்றி வளைத்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பொதுமக்களுடன் கலந்துரையாடிய மாவட்ட அரசாங்க அதிபர், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு வருகைதந்தது இங்குள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து அதனை தீர்த்து வைப்பதற்காக எனவும், தன்னால் முடிந்தவரை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கணக்காளர் மற்றும் காணிவிடயங்கள் உள்ளிட்ட தரம் உயர்த்தல் விடயங்களுக்குரிய
பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் என பொதுமக்களிடம் வாக்குறுதியளித்தார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக நீதிமன்ற வழக்கு முடியும் வரை உங்கள் வழமையான சேவைகளை இப் பிரதேச செயலகத்திலே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
அத்துடன் அரசாங்க அதிபர் இங்குள்ள சிவில் அமைப்புக்கள், தமிழ் பிரதிநிதிகள் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு விரைவில் தனியாக கணக்காளர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் இங்குள்ள மக்கள் அனைவரும் மாவட்ட
செயலகத்திற்கு வருகை தந்து, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்ததக்கது.