அரசனை நம்பி புருசனை கைவிடுதல் என்றொரு வழக்குச் சொல், தமிழர்கள் மத்தியிலுண்டு.
தமிழ் மக்களின் நிலைமையும் அப்படியாகிவிட்டது.
எதனையும் தமிழ் அரசியல் தலைமைகளால் தடுக்க முடியவில்லை.
இதில் எந்தவொரு கட்சியும், ஏனைய கட்சிகளை விமர்சிக்க முடியாது.
அரசாங்கத்தோடு இணைந்திருந்திருப்பதன் மூலம் விடயங்களைச் சாதிக்க முடியுமென்று வாதிடும் தமிழ்க் கட்சிகளும் வாய்மூடியிருக்கின்றன.
அவ்வப்போது இடம்பெறும் விடயங்களுக்கு எதிர்வினையாற்றும் விடயங்களை மட்டுமே, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆற்றிக்கொண்டிருக்கின்றன.
சர்வதேச அழுத்தங்கள் கைகொடுக்கும் போன்ற கதைகளும் புஸ் வாணமாகிக்கொண்டிருக்கின்றது.
கடந்த 13 வருடகால அழுத்தங்களைக் கண்டு அரசாங்கம் அஞ்சவில்லை.
நாடு தற்போது பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும்போது, இனப்பிரச்னை என்னும் சொல்லையே மேற்குலக நாடுகள் உச்சரிக்கவில்லை. இதிலிருந்து தமிழர்கள் எதனை கற்றுக்கொள்வது? நாடு பொருளாதார நெருக்கடிக்குள் இருப்பது தமிழர்களுக்கு சாதகமானதென்னும் கதை சொல்லப்பட்டது.
ஆனால் எந்தவொரு நாடும் அதனை ஒரு விடயமாகவே எடுக்கவில்லை.
தங்களது நலன்கள் சார்ந்த விடயங்களை மட்டுமே அனைத்து நாடுகளும் முதன்மைப்படுத்துகின்றன.
புலம்பெயர் அமைப்புக்களை பொறுத்தவரையில் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடுகின்றன.
மனித உரிமைகள் பேரவைக்கு தவறாமல் செல்கின்றனர்.
ஒரு குழுவினர் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பேசுகின்றனர்.
இன்னொரு குழுவோ, தமிழ் மக்கள் தங்களின் தலைவிதியை தீர்மானிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று வெறும் சுலோகங்களை முன்வைத்து கொண்டிருக்கின்றது.
ஆனால் தமிழர் வாழ்வோ முன்னரை விடவும் மோசமடைந்து செல்கின்றது.
ஆனால் இந்த விடயங்கள் தொடர்பில் தாயத்தில் உள்ள பிரதான கட்சிகளோ அல்லது பெரும்பான்மையான மக்களோ கருத்தில் கொள்ளவில்லை.
அவர்களது நிலைமை பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கள் என்பதாக இருக்கின்றது.
புலம்பெயர் அமைப்புக்களில் ஒரு பகுதியினர் விசித்திர உலகத்தில் இருக்கின்றனர்.
ஒருவேளை அவர்களோ அல்லது அவர்களது குடும்பங்களோ இலங்கையை நோக்கி வரப்போவதில்லை.
இதன் காரணமாகவோ என்னவோ, தங்களின் மனதில் உதிப்பதையெல்லாம் அவர்கள் கூறிக்கொண்டிருக்கலாம்.
ஆனால் நாட்டில் நடைபெறும் நிலைமையை உற்றுநோக்கினால் – தமிழ் மக்களின் நிலைமையோ எதுவும் இல்லாத சூனியத்தை நோக்கி நகர்கின்றதா என்னும் கேள்வியே எழுகின்றது.
நடைபெறும் எந்தவொரு விடயத்தையும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்த நிலைமையானது தமிழர் தாயகத்தின் எதிர்காலத்தைக் கட்டியம் கூறுகின்றது.
இப்போது நடைபெறும் சாதாரண விடயங்களையே தடுத்துநிறுத்த முடியாமல் இருக்கின்றபோது, எதிர்காலத்தில் வெளித்தரப்புக்களின் ஆதரவோடு நடைபெறப்போகின்ற விடயங்களை எவ்வாறு தடுத்துநிறுத்த முடியும்.
பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெறத்தான் போகின்றன.
அவற்றை தமிழ் அரசியல் தலைமைகளாலோ புலம்பெயர் அமைப்புக்களாலோ தடுத்துநிறுத்த முடியாது.
ஒருவேளை மாகாண சபை முறைமை இயங்குநிலையில் இருந்தாலாவது, சில விடங்களில் தலையீடு செய்யும் அதிகாரத்தை தமிழர்கள் பெற்றிருக்கலாம்.
ஆனால் அதுவும் தற்போதில்லை.
இப்போது தமிழ்த் தேசிய அரசியலின் நிலைமையானது, அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலையாகிவிட்டது.
அரசனும் இல்லை – புருசனும் இல்லை.
தமிழ் மக்களோ கையறுநிலையில்.
இங்கு தமிழ் மக்கள் என்பதால், வடக்கு-கிழக்கில் வாழ்ந்துவருகின்ற பெரும்பாலான தமிழ் மக்களே குறிக்கப்படுகின்றனர்.
அவர்களது வாழ்வில் விளக்கேற்றுவதற்குத்தான், இப்போது ஒரு கட்டமைப்பு தேவைப்படுகின்றது.
வசதியுள்ள அரசியல் வாதிகளினதும், வசிதியுள்ள புலம்பெயர் குழுக்களினதும் சுகபோக அரசியல் கனவுகளுக்காக, ஏழை மக்கள் செத்தொழிய முடியாது.