அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் ஊடகங்களையும் நீதித்துறையையும் விளையாட்டாகக் கருதுகின்றனர்- எதிர்க் கட்சித் தலைவர் சஜித்

0
138

அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஜனநாயகத்தின் பெயரால் ஊடகங்களையும் நீதித்துறையையும் விளையாட்டாகக் கருதுவதாகவும், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதித்துறையை கடுமையாக அவமதிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தை இன்று (24) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்ததுடன், இந்நாட்களில் முட்டைத் தொழில்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

அவர்களின் பிரச்சினைகள் மட்டுமன்றி பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டன. இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஒரு சட்டமும் அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு வேறு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நீதித்துறை மற்றும் ஊடகங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இந்த அவமதிப்பு அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஒடுக்குமுறைக்கு எதிராக எதிர்க் கட்சியில் உள்ள சக்திகளை வீதிக்கு இழுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்ட அவர், இந்தத் தருணத்தில் நாடாளுமன்றக் குழு அமைப்பின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிப்பது பொதுமக்களை மனதில் கொண்டேயாகும் எனவும் தெரிவித்தார்.